நான் யாருக்குமே அச்சப்படமாட்டேன்-என்னை தொடக் கூட முடியாது.. என்னை சுட்டுக் கொல்லட்டும்-ராகுல் ஆவேசம்
டெல்லி: தாம் பிரதமர் மோடிக்கோ அல்லது வேறு யாருக்குமே அச்சப்பட மாட்டேன்.. என்னை யாராலும் தொட முடியாது.. என்னை சுட்டுக் கொன்றால் கொல்லட்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக கூறியுள்ளார்.
அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதியில் சீனா புதிய கிராமம் ஒன்றை கட்டி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இது தொடர்பாக மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ட்விட்டரில் ராகுலை விமர்சித்திருந்தார். இந்த நிலையில் டெல்லியில் மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்கள் குறித்த கையேடு ஒன்றை வெளியிட்டார் ராகுல் காந்தி. அப்போது செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது:
புதிய விவசாய சட்டங்கள் தேசத்தின் விவசாய துறையை அழிக்கக் கூடியது. டெல்லியில் போராடும் விவசாயிகளை நான் 100% ஆதரிக்கிறேன். இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறார்கள்.. எங்களுடன் இணைந்து நிற்கின்றனர்.
விவசாயிகளுக்கு உண்மை நிலவரம் என்ன என்பது தெரியும். ராகுல் காந்தி என்ன செய்கிறார் என்பது விவசாயிகளுக்கும் தெரியும். என் மீது எந்த புகாரும் இல்லை. நான் பிரதமர் மோடிக்கோ அல்லது வேறு யாருக்குமோ பயப்படமாட்டேன். என்னை யாரும் தொடக் கூட முடியாது..அவர்களால் என்னை சுட்டுக் கொல்லத்தான் முடியும்.
நான் தேசபக்தி கொண்டவன். இந்த தேசத்தை நான் பாதுகாக்கக் கூடியவன். அவர்களைவிட நான் தேசபக்தியில் தீவிரமானவன். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.