என்னது இந்தி பற்றி நான் அப்படி பேசினேனா.. அந்தர் பல்டியடித்த அமித் ஷா! பஞ்சாயத்து ஓவர்
Recommended Video
டெல்லி: பொதுமொழி பற்றிய எனது பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.
இந்தி தினத்தின்போது, ட்விட்டரிலும் தனது உரையிலும் இந்தி தொடர்பாக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார் அமித்ஷா. அதன்படி, இந்தியாவுக்கு தேசிய மொழி ஒன்று தேவைப்படுகிறது. அதற்கு இந்தி பொருத்தமான மொழியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நாடு முழுக்க அனைத்து மாநிலங்களிலும் அமித்ஷா ஹிந்தி திணிப்பை கொண்டு வர நினைக்கிறார் என்று கொந்தளிப்பு ஏற்பட்டது.
திமுக போராட்டம்
தமிழகத்தில் வரும் 20-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவிலும் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்தியை தாய்மொழியாக கொள்ளாத பல்வேறு மாநிலங்களிலும் அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
விளக்கம்
இந்த நிலையில் அமித் ஷா இன்று ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது என்றும், நாடு முழுவதும் ஒரே மொழியாக இந்தி பேசப்பட வேண்டும் என்று நான் கூறவில்லை. தங்களது தாய் மொழிக்கு அடுத்தபடியாக இந்தி மொழியை இரண்டாவது மொழியாக கற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் நான் கூறியிருந்தேன்.
அரசியல்
தனிப்பட்ட முறையில் நான் கூட இந்தியை தாய்மொழியாக பேசாத மாநிலமான குஜராத்தில் இருந்து தான் வந்துள்ளேன். ஆனால் எனது பேச்சை வைத்து சிலர் அரசியல் செய்ய விரும்பினால், செய்து கொள்ளட்டும். அது அவர்கள் விருப்பம்.
பிற நாடுகளின் நிலை
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் தங்களது உள்ளூர் மொழிகள் மக்களால் மறக்கப்பட்டு ஆங்கிலம் தான் இணைப்பு மொழியாகவும், பொது மொழியாகவும் மாறிவிட்டது. அதுபோன்ற நிலை இந்தியாவுக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான், இரண்டாவது மொழியாக இந்தியையும் கற்றுக் கொள்ளலாம் என்று நான் தெரிவித்திருந்தேன். இவ்வாறு அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.