"ஆல் இஸ் வெல்" என சொல்ல முடியாது.. கடல் எனில் அலை இருக்கும்.. ப. சிதம்பரம் சூசகம்.. என்ன சொல்கிறார்?
காங்கிரஸ் கட்சிக்குள் ஆல் இஸ் வெல் என்று சொல்ல முடியாது, கடல் என்றால் அலை இருக்கும், கட்சி என்றால் பிரச்சனை இருக்கும் என்று ப. சிதம்பரம் சூசகமாக பேசி இருக்கிறார்.
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்குள் எல்லாமே "ஆல் இஸ் வெல்'' என்று சொல்ல முடியாது, கடல் என்றால் அலை இருக்கும், கட்சி என்றால் பிரச்சனை இருக்கும் என்று ப. சிதம்பரம் சூசகமாக பேசி இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சிக்குள் இன்று நாள் முழுக்க அதிரடி திருப்பங்களும், மாற்றங்களும் நடந்து வருகிறது. நேற்று காங்கிரஸ் தலைமைக்கு எதிராக 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதிய பின் தொடங்கிய பிரச்சனை இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பூதாகரமாக வெடித்தது.
இன்று நடந்த காங்கிரஸ் கூட்டத்தின் முடிவில், காங்கிரசின் இடைகால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.அடுத்த தலைவரை 6 மாதங்களுக்குள் தேர்வு செய்ய வேண்டும் என்று சோனியா காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
சோனியா காந்தி யார் மீதும் கோபத்தில் இல்லை.. மீட்டிங்கில் நடந்தது என்ன? காங். காரிய கமிட்டி விளக்கம்!
என்ன சொன்னார்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி பூசல் குறித்து முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். எல்லாம் சரியாகிவிட்டது என்று சொல்ல முடியாது. ஆல் இஸ் வெல் என்று கூறிவிட முடியாது. கடலில் எப்போதாவது அலைகள் நின்று இருக்கிறதா? கடல் என்றால் அலை இருக்கத்தான் செய்யும். எப்போதும் ஏதாவது பிரச்சனை இருக்கவே செய்யும்.இன்று சில விஷயங்களை காரிய கமிட்டி கூட்டத்தில் பேசினோம். காங்கிரஸ் சீக்கிரம் வலிமை அடையும்.
ஆக்டிவ் கட்சி
விரைவில் கட்சி மிக ஆக்டிவாக மாறும். காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதிய எல்லோரும் பாஜகவை கடுமையாக எதிர்த்தவர்கள். நானும் பாஜகவை கடுமையாக எதிர்த்தவன். ராகுல் காந்தியும் கூடதான். எப்போதும் சில கருத்து வேறுபாடு கட்சிக்குள் இருக்கவே செய்யும். கருத்து வேறுபாடு நல்லதுதான். அப்போதுதான் மாற்றம் வரும்.
பிரச்சனை இல்லையென்றால்
பிரச்சனை இல்லையென்றால் கட்சியில் எந்த நல்ல மாற்றமும் நடக்காது, மூத்த தலைவர்கள் பாஜகவிற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று யாரும் சொல்லவில்லை. இது தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டுவிட்டது. இது தொடர்பாக தவறான செய்திகள் உலா வந்தது. ஆனால் அதற்கும் கூட சரியான விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது, என்று ப. சிதம்பரம் குறிப்பிட்டு இருக்கிறார்.
என்ன செல்கிறார்
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி மீண்டும் நியமிக்கப்பட்டதை அடுத்து கட்சிக்குள் பிரச்சனை தீரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ப. சிதம்பரம் ஆல் இஸ் வெல் என்று சொல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார். இவர் எதை குறிப்பிட்டு இப்படி பேசுகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவருக்கான ரேஸில் ப. சிதம்பரமும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.