பிரக்யாசிங் தாக்கூரின் கோட்சே புகழ் புராணத்துக்கு திமுக எம்.பி. ஆ.ராசாவால் முடிவுரை!
Recommended Video
டெல்லி: மகாத்மா காந்தி கொலையாளி கோட்சேவை தேசபக்தர் என புகழ்ந்து பேசியதற்காக பாஜக எம்.பி. பிரக்யாசிங் தாக்கூர் லோக்சபாவில் மன்னிப்பு கோரினார். கோட்சேவை தொடர்ந்து புகழ்ந்து பேசிவந்த பிரக்யாசிங் தாக்கூரின் நடவடிக்கை முடிவுக்கு வர காரணமே திமுக எம்.பி. ஆ. ராசாதான்வின் லோக்சபா பேச்சுதான்.
லோக்சபாவில் இன்று பேசிய பிரக்யாசிங் தாக்கூர், இந்த சபையில் (கோட்சே குறித்து) நான் பேசியது தவறாக திரிக்கப்பட்டுவிட்டது. மகாத்மா காந்தி தேசத்துக்கு ஆற்றிய சேவைகளை மதிக்கிறேன். என்னுடைய பேச்சு யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என கூறியிருந்தார்.
இதற்கு முன்னரும் பல முறை கோட்சேவை தேச பக்தர் என இடைவிடாமல் புகழ்ந்து பேசினார் இந்த பிரக்யாசிங். இவர்தான் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்துவிட்டு திரும்பியவர்.
மன்னிப்பு கோருகிறேன்.. நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.. பிரக்யா தாக்கூர் பரபரப்பு!
இப்படி ஒரு சர்ச்சைக்குரிய நபரை போபால் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்திய போதே சர்ச்சையானது. அத்துடன் தேர்தல் பிரசாரத்திலும் சர்ச்சைக்குரிய வகையில் பிரக்யாசிங் பேசியதால் அவருக்கு தேர்தல் ஆணையத்தால் வாய்ப்பூட்டும் போடப்பட்டது.
இந்த நிலையில்தான் மீண்டும் கோட்சே சர்ச்சையில் சிக்கினார் பிரக்யாசிங். லோக்சபாவில் எஸ்பிஜி சட்ட திருத்தம் மீதான விவாதத்தின் போது திமுக எம்.பி. ஆ. ராசா பேசினார். அப்போது, மகாத்மா காந்தி கொலையாளியான கோட்சேவின் வாக்குமூலம் குறித்து குறிப்பிட்டார்.
அதில், மகாத்மா காந்தியை படுகொலை செய்வதற்காக 32 ஆண்டுகாலம் காத்திருந்ததாகவும் திட்டமிட்டே காந்தியை கொலை செய்தேன் எனவும் ஆ. ராசா குறிப்பிட்டார் காந்தி ஒரு சார்புக் கொள்கை உள்ளவர் என்பதால் கொலை செய்ய நினைத்தேன் எனவும் கோட்சே குறிப்பிட்டிருக்கிறார்.
இவ்வாறு ஆ. ராசா பேசிக் கொண்டிருந்தார். அப்போதுதான் பிரக்யாசிங் தாக்கூர் குறுக்கிட்டு கோட்சே ஒரு தேசபக்தர் என கூச்சலிட்டார். இதில் கடுப்பாகிப் போனார் ஆ. ராசா.
அத்துடன் ஆ. ராசாவுக்கு ஆதரவாக பல்வேறு கட்சி எம்.பி.க்களும் குரல் கொடுத்து பிரக்யாசிங் தாக்கூரை கண்டித்தனர். லோக்சபா சபாநாயகரும் பிரக்யாசிங் தாக்கூரின் பேச்சை சபை குறிப்பில் இருந்து நீக்கினார்.
தேசத்தந்தையை கொலை செய்த கொலையாளியை நாடாளுமன்றத்திலேயே புகழ்வதை எந்த ஒரு கட்சியும் ஏற்கவில்லை. பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டாவும் கூட, பிரக்யாசிங்கின் பேச்சைக் கண்டித்தார். அவரை பாதுகாப்புக்கான நாடாளுமன்ற குழுவில் இருந்து நீக்க பரிந்துரைத்தார். பாஜகவின் எம்பிக்கள் குழு கூட்டத்தில் பங்கேற்கவும் தடை விதித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியோ, ஒரு பயங்கரவாதியை பற்றி பயங்கரவாதி புகழ்கிறார் என தாக்கினார். இது பாஜகவுக்கும் பெரும் நெருக்கடியை கொடுத்ததால் இன்று வேறுவழியே இல்லாமல் லோக்சபாவில் பகிரங்க மன்னிப்பு கோரியிருக்கிறார் சர்ச்சைக்குரிய எம்.பி. பிரக்யாசிங் தாக்கூர்.