இந்திய இறையாண்மையை பற்றி நிற்பேன்.. தமிழில் உறுதிமொழி வாசித்து எம்பி-யாக பதவியேற்ற வைகோ
Recommended Video
டெல்லி: தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்று எம்பி-க்களாக பதவியேற்று கொண்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் மைத்ரேயன், கே.ஆர். அர்ஜுனன், ஆர்.லட்சுமணன், டி.ரத்தினவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா ஆகியோர் நேற்றுடன் மாநிலங்களவை எம்பி பதவியில் இருந்து ஓய்வு பெற்றனர்
மேலும் மாநிலங்களவை எம்பி-யாக இருந்த கனிமொழி, மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கான 6 இடங்கள் காலியானது.
தமிழகத்தில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், திமுக மற்றும் அதிமுக சார்பில் தலா 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
திமுக சார்பில் தொமுச பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அதிமுக சார்பில் முகமது ஜான், சந்திரசேகரன், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களும் இன்று பதவியேற்றனர்.
முதலில் மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுக-வின் சந்திரசேகர், முகமது ஜான் பதவியேற்று கொண்டனர். பின்னர் திமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சண்முகம் மாநிலங்களவை எம்பி-யாக பதவியேற்று கொண்டார்.
அதன் பின்னர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எம்பி-யாக உறுதிமொழி வாசித்து பதவியேற்று கொண்டார். இந்திய இறையாண்மையை பற்றி நிற்பேன் என தமிழில் உறுதி கூறி மாநிலங்களவை எம்பி-யாக பதவியேற்றார் வைகோ
பின்னர் திமுக சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பி.வில்சன் எம்பி-யாக பதவியேற்றார்.