டெல்லி போலீஸ் வழக்கு- 'நோ' மிரட்டல்- விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவுதான்- கிரேட்டா தன்பெர்க் ட்வீட்
டெல்லி: டெல்லியில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு தமது ஆதரவு தொடரும் என்று சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் மீண்டும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பல்வேறு கெடுபிடிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனை மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்தும் வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, பருவநிலை மாற்றம் தொடர்பான சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் ஆகியோர் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவுகளை போட்டிருந்தனர்.
இதற்கு மத்திய அரசும் மத்திய அமைச்சர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதேபோல் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்களும் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கிரேட்டா தன்பெர்க் இன்று மாலை மீண்டும் ஒரு ட்விட்டர் பதிவை போட்டுள்ளார்.
அதில், விவசாயிகளின் அமைதிவழி போராட்டத்தை இப்போதும் ஆதரிக்கிறேன். வெறுப்பு விமர்சனம், மிரட்டல்கள், மனித உரிமை மீறல்கள் எதனையும் மாற்றிவிடாது என ட்விட்டரில் கூறியுள்ளார் கிரேட்டா தன்பெர்க்.