ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியை பாதுகாக்க நடவடிக்கை.. முதல் பேட்டியிலேயே சக்திகாந்த தாஸ் அதிரடி
Recommended Video
டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் இன்று பதவியேற்றுக் கொண்டார். ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் உறுதியளித்தார்.
ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவி வகித்து வந்த உர்ஜித் பட்டேல், திடீரென சில தினங்களுக்கு முன்பாக அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். இதையடுத்து இன்று அவர் டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். இதன்பிறகு நிருபர்களிடம் அவர் பேசியதாவது:
இந்திய ரிசர்வ் வங்கி மிகச்சிறந்த ஒரு அமைப்பு. இதற்கு செழுமையான மரபு உள்ளது. ரிசர்வ் வங்கியின் தொழில்முறை தன்மையை நிலை நிறுத்துவதற்கு நான் முயற்சி எடுப்பேன். அதன் மதிப்பையும், தன்னாட்சியையும் (autonomy) நிலைநாட்ட முயற்சி செய்வேன். அதேசமயம் சில பொறுப்புத்தன்மை இருக்க வேண்டும். அதை உறுதி செய்வேன். எனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பு மிகப்பெரிய கவுரவம். இந்திய பொருளாதாரத்தின் நன்மைக்காக என்னால் முடிந்த அளவுக்கு உழைப்பேன்.
இன்னும் சில தினங்களில் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் தலைவர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
உர்ஜித் பட்டேல் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி தன்னாட்சிக்கு, மத்திய அரசால், பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக கூறிதான் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்ததாக கூறப்படும் நிலையில், முதல் பேட்டியிலேயே, தன்னாட்சி குறித்து, சக்திகாந்த தாஸ் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.