லடாக்கில் வட்டமடித்த சீன போர் விமானங்கள்.. "அனைத்துக்கும் ரெடி".. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு
டெல்லி: லடாக் எல்லையில் சீன போர் விமானங்கள் அண்மையில் வட்டம் அடித்த சம்பவம் தொடர்பாக பேசிய இந்திய விமானப் படை தலைமை தளபதி வி.ஆர். செளத்ரி, எந்தவிதமான சூழலையும் எதிர்கொள்ள விமானப்படை தயாராக இருப்பதாக அதிரடியாக தெரிவித்துள்ளார்.
லடாக்கில் இருந்து சீனப் படைகள் வாபஸ் பெற்று வரும் அதே சமயத்தில், மீண்டும் இந்தியாவை சீண்டி பார்க்கும் அந்நாட்டின் செயலை சுட்டிக்காட்டி வி.ஆர். சவுத்ரி இவ்வாறு கூறியுள்ளார்.
லடாக்கில் சீனா மறுபடியும் அத்துமீறலாம் என சர்வதேச நாடுகள் கூறி வரும் நிலையில், இந்தியாவின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு: பிரான்ஸ், ஆஸ்திரியா, அமெரிக்கா நாடுகளை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
லடாக்கை கைப்பற்ற விரும்பும் சீனா
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனாவின் சமீபத்திய பார்வை இந்தியாவின் லடாக்கின் மீது விழுந்திருக்கிறது. மிகப்பெரிய பனிமலைகள், ரத்தம் உறையும் குளிர், நீளமான பாங்காங் ஏரி என இயற்கை அரண்கள் சூழ்ந்த பகுதியாக லடாக் விளங்குகிறது. எனவே லடாக்கை கைப்பற்றும் நோக்கில் திடீரென கடந்த 2020-ம் ஆண்டு சீன ராணுவம் அங்கு ஊடுருவியது. நூற்றுக்கணக்கான சீன ராணுவ வீரர்கள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்ததால், லடாக் சீனாவின் வசம் சென்றுவிடும் என்றே உலக நாடுகள் கருதின.
சிதறி ஓடிய சீன ராணுவ வீரர்கள்
அதிரடியாக நுழைந்தால் லடாக்கை கைப்பற்றி விடலாம் என எண்ணிய சீனாவுக்கு இந்திய ராணுவ வீரர்கள் சிம்ம சொப்பனமாக விளங்கினர். குறிப்பாக, பனிமலையில் போர்புரியும் திறன்கொண்ட 'எஸ்டாபிளிஸ்மென்ட் 22' அல்லது 'ஸ்பெஷல் பிரான்டியர் போர்ஸ்' என அழைக்கப்படும் எஸ்எப்எப் சிறப்பு உளவுப் படையினரின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் சீன ராணுவத்தினர் சிதறி ஓடினர். இதனால் முழு லடாக்கையும் பிடித்துவிடலாம் என்ற கனவுடன் ஊடுருவிய சீன ராணுவம், ஆங்காங்கே சிறு சிறு பகுதிகளை மட்டும் கைப்பற்றியது.
வெளியேறிய சீன ராணுவம்
இதன் தொடர்ச்சியாக, லடாக்கில் இருந்து சீன ராணுவத்தை முழுமையாக வெளியேற்ற அந்நாட்டுடன் ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தையை இந்தியா நடத்தி வந்தது. முதலில், லடாக்கை விட்டு வெளியேற முரண்டு பிடித்த சீனா, பின்னர் இந்தியாவின் வற்புறுத்தலுக்கு அடிப்பணிந்தது. லடாக்கில் இருந்து தனது ராணுவத் துருப்புகளை வாபஸ் பெற தொடங்கியது. இதன் விளைவாக, கடந்த மாதத்தில் லடாக்கில் இருந்து முழுமையாக சீன ராணுவம் வெளியேறியதாக இந்திய அரசு அறிவித்தது.
வட்டமிட்ட சீன போர் விமானங்கள்
லடாக்கில் இருந்து சீனா முழுமையாக வெளியேறிய போதிலும், லடாக்கின் மீதான தனது கழுகுப் பார்வையை சீனா விலக்கிக் கொள்ளவில்லை. லடாக்கை ஒட்டியுள்ள சீன எல்லையில் பெரிய அளவிலான ராணுவத் தளவாடங்களை அந்நாடு அமைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மிகப்பெரிய மேம்பாலங்கள், போர் விமான ஓடுதளம், ராணுவ வீரர்கள் தங்குவதற்கான முகாம்கள் உள்ளிட்டவற்றை சீனா அமைத்து இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளிலும் ஏராளமான ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளது. ஒருவேளை, இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் அருணாச்சலப் பிரதேசத்தையும், லடாக்கையும் எளிதில் கைப்பற்றுவதற்கான நோக்கிலேயே சீனா இத்தகையை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனை மெய்ப்பிக்கும் விதமாக லடாக் எல்லைக்கு அருகே சீனாவின் அதிநவீன போர் விமானங்கள் சில தினங்களுக்கு முன்பு பல மணிநேரமாக வட்டமிட்டப்படி பறந்தன. இது, இந்தியாவுக்கு சீனா தரும் எச்சரிக்கையாகவே பார்க்கப்பட்டது.
"அனைத்துக்கும் தயார்" - இந்தியா அதிரடி
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்திய விமானப்படை தலைமை தளபதி வி.ஆர். செளத்ரியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது: லடாக் எல்லையில் அதிக அளவிலான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இரவு - பகலாக அங்கு தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளிலும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர, விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வெளி கண்காணிப்பிலும் இந்திய விமானப்படை ஈடுபட்டுள்ளது. லடாக் எல்லையில் சீனாவின் நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சீனாவில் அத்துமீறலை தடுக்க அனைத்து விதத்திலும் இந்திய விமானப் படை தயாராக உள்ளது. லடாக்கில் இயல்பு நிலையை கொண்டு வரவே இந்திய விமானப்படை விரும்புகிறது. அதே வேளையில், சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இன்னும் சொல்ல வேண்டுமானால், எவ்வளவு மோசமான சூழலையும் சந்திக்க விமானப் படை தயார்நிலையில் உள்ளது. இந்த செய்தியை சீனாவுக்கும் இந்தியா தெரியப்படுத்திவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.