சல்யூட்.. விங் கமாண்டர் அபிநந்தன் வீர் சக்ரா விருதுக்கு தேர்வு.. மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு!
Recommended Video
டெல்லி: இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வீர் சக்ரா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் விமானம் இந்திய எல்லைக்குள் வந்தது. அப்போது அந்த விமானத்தை துரத்திக் கொண்டு இந்திய விமானப்படை வீரர்கள் சென்றனர்.
இதில் பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை தனது மிக் 21 விமானத்தில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் துரத்தி சென்றார். ஆனால் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற அவரின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன்பின் பாகிஸ்தான் ராணுவத்தால் அவர் கைது செய்யப்பட்டார்.
என்ன அழுத்தம்
இதன்பின் சர்வதேச அழுத்தம் மற்றும் நல்லெண்ண நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானில் இருந்து 60 மணி நேரத்திற்கு பின் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். அவரை இந்திய எல்லைக்குள் வந்து பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது.
அபிநந்தன் உலகம்
தமிழகத்தை சேர்ந்த அபிநந்தன் அதன்பின் உலகம் முழுக்க பிரபலம் அடைந்தார். பாகிஸ்தானுக்குள் சென்றும் கூட, அங்கு எதிரி நாட்டு ராணுவத்திற்கு இடையிலும் கூட அவர் தைரியமாக தெளிவாக இருந்தார். அவர்கள் கேட்ட ராணுவ ரகசிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று கூறியது எல்லாம் மக்களை பெரிதும் கவர்ந்தது.
என்ன அறிவிப்பு
இந்த நிலையில் அவரின் செயலை பாராட்டும் வகையில் தற்போது விங் கமாண்டர் அபிநந்தன் வீர் சக்ரா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே அவருக்கு இந்த விருது வழங்கப்படும் என்று கணிக்கப்பட்ட நிலையில் தற்போது அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாளை வீர்சக்ரா
அபிநந்தனுக்கு நாளை வீர்சக்ரா விருது வழங்கப்படுகிறது. நாளை சுதந்திர தின விழாவில் இவருக்கு விருது வழங்கப்பட உள்ளது. அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதை அடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள்.