தடுப்பூசியே வந்தாலும் முககவசம் நம்மை விட்டு ஒரு போதும் போகாது.. ஐசிஎம்ஆர் தலைவர் பேச்சு
டெல்லி: தடுப்பூசி கிடைத்தாலும் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கொரோனா தடுப்பு சுகாதார முன்னெச்சரிக்கைகளை நீண்ட காலம் இருக்கும், எனவே கட்டாயம் கோவிட் -19 வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தலைமை பேராசிரியர் பால்ராம் பார்கவா தெரிவித்தார்.
ஐ.சி.எம்.ஆர் தலைமை பேராசிரியர் பால்ராம் பார்கவா, லக்னோவின் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 'கோவிட் -19 நிர்வாகத்தில் மாற்றங்களை மாற்றியமைத்தல்' என்ற தலைப்பில் ஒரு வெபினாரில் பேசினார். அப்போது அவர், தடுப்பூசி வளர்ச்சியில் இந்தியா விரைவான முன்னேற்றம் அடைந்து வருகிறது.
அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்க இலக்கு உள்ளது. அதன் பின்னர் எதிர்கால நடவடிக்கை முடிவு செய்யப்படும். இந்தியா கொரோனா தடுப்பூசியை உருவாக்கும், அது தனக்கு மட்டுமல்ல, வளரும் நாடுகளுக்கும் தான். கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்கும் பணியில் இருபத்தி நான்கு உற்பத்தி பிரிவுகளும் 19 நிறுவனங்களும் ஈடுபடுகின்றன.
தடுப்பூசிக்கு நிகராக முககவசம் வேலை செய்கிறது. தடுப்பூசி உருவாக்கப்பட்ட பின்னரும் முககவசம் அணிய வேண்டும். கொரோனாவில் இருந்து மீண்டவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் முககவசம் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கொரோனா பரவுவதை தடுப்பதில் முககவசம் முக்கிய பங்கு வகிப்பதை புறக்கணிக்க முடியாது. கொரோனாவை வெல்ல தடுப்பூசியை பயன்படுத்த உள்ளோம். இந்தியாவில் ஐந்து தடுப்பூசி மருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இவற்றில் இரண்டை இந்தியா உருவாக்கி வருகிறது, அதில் மூன்று வெளிநாட்டிலிருந்து வந்தவை. ஆனால் கொரோனாவை தடுக்க போதுமானதாக இருக்காது. சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்" என்றார்.