வாங்குன ரேபிட் டெஸ்ட் கருவிகளை அப்படியே சீனாவுக்கு திருப்பியனுப்புங்க.. ஐசிஎம்ஆர் அதிரடி
டெல்லி: ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு ICMR கடிதம் எழுதியுள்ளது. RT-PCR கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
சீனாவை சேர்ந்த இரண்டு நிறுவனங்களிடம் வாங்கிய ரேபிட் கருவிகளை திரும்ப ஒப்படைக்க ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் சமூக பரவலை கட்டுப்படுத்துவதற்காக சோதனைகளை பரவலாக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்தது.
சர்ச்சைகள்
இதை அடுத்து சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட் எனப்படும் கருவிகள் வரவழைக்கப்பட்டன. இதிலும் ஆரம்பத்திலிருந்து ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகள். தமிழகம் ஆர்டர் செய்த ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை மத்திய அரசே நேரடியாக வாங்க உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. பின்னர் இந்தியாவுக்கு வரவிருந்த இந்த வகைக் கருவிகள் அமெரிக்காவால் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு இந்தியா வந்து சேர்ந்தது ரேபிட் டெஸ்ட் கிட். 4 லட்சம் வரை தேவைப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு, சுமார் 25,000 ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் மட்டுமே வந்தன.
ராஜஸ்தான் குற்றச்சாட்டு
இந்த நிலையில் ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க அரசுகள் இந்த பரிசோதனை கருவிகள் முடிவுகளில் திருப்தி இல்லை என்று தெரிவித்தன. சுமார் 94% தவறான முடிவுகள் காட்டுவதாக ராஜஸ்தான் அரசு ஐசிஎம்ஆருக்கு கடிதம் எழுதியது. எனவே, இரண்டு நாட்களுக்கு எந்த ஒரு மாநிலமும் ரேபிட் டெஸ்ட் கிட் வைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள கூடாது என்று ஐசிஎம்ஆர் அறிவித்திருந்தது.
வேண்டவே வேண்டாம்
இன்று மற்றொரு அதிரடியாக, சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது. இதை திரும்பவும் அந்த நாட்டுக்கு அனுப்பி விடுமாறு அறிவுரை வழங்கியுள்ளது.
திருப்பியனுப்புதல்
ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இப்போது மொத்தமாக திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், "பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே" என்ற வகையில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். பழைய நடைமுறைப்படி பிசிஆர் எனப்படும் பரிசோதனை முறை மட்டும்தான் இனி செய்ய முடியும். இதனால் அதிவேகமாக பரிசோதனைகள் செய்ய முடியாது என்று தெரிகிறது.