இதுதான் ஒரே வழி.. அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை.. ஐசிஎம்ஆர் அதிரடி
டெல்லி: அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரிசோதனை தொடர்பாக திருத்தப்பட்ட வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 424 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14,907 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 472,985 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வருவதால் அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரிசோதனை தொடர்பாக திருத்தப்பட்ட வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
புதுவையில் கெட்ட ஆட்டம் காட்டும் கொரோனா- முதல் முறையாக ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா
அனைவருக்கும் பரிசோதனை
பரிசோதனைகள் செய்வதும், தொடர்பு தடம் அறிவதும், சிகிச்சை அளிப்பதும்தான் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் ஒரே வழி என்பதால் என்பதால், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அனைத்து அறிகுறி நபர்களுக்கும் சோதனை பரவலாகக் கிடைக்க வேண்டியது அவசியம், மேலும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான தொடர்பு தடமறிதல் வழிமுறைகள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். சோதனைகளை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநில அரசுகள், பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்துகிறது
இடம் பெயர்ந்தோர்
வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியோர், இடம் பெயர்ந்தோர் இடையே காய்ச்சல் போன்ற கொரோனாவிற்கான எந்த அறிகுறிகள் இருந்தாலும் 7 நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்தல் வேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும்.
கொரோனா பணி
‘ஹாட்ஸ்பாட்' எனப்படும் நோய் தீவிரமாக பாதித்த பகுதிகளில் அல்லது கட்டுப்பாட்டு பகுதிகளில் அறிகுறி உள்ளவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். கொரோனா வைரஸ் கட்டுப்பாடு பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் உள்ள முன்வரிசை பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும்.
ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை
அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் , அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை பிரிவுகளில் ‘ஆன்டிபாடி' அடிப்படையிலான கொரோனா பரிசோதனை செய்வதற்கு அரசு அதிகாரிகள் உதவ வேண்டும். அனைத்து கட்டுப்பாட்டு மண்டலங்களிலும், அனைத்து மத்திய மாநில அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில், அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவமனை மற்றும் சுகாதார பராமரிப்புக்கான சான்றிதழ் வழங்கும் தேசிய அங்கீகார வாரியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகரித்துள்ள பரிசோதனை கூடங்களிலும், கொரோனா வைரஸ் தொற்று கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையுடன் சேர்த்து துரித ஆன்டிஜென் கண்டறியும் சோதனைகளையும் பயன்படுத்த வேண்டும்.
பதிவு செய்ய வேண்டும்
துரித ஆன்டிஜன் சோதனைகளை செய்ய விரும்பும் அனைத்து மருத்துவமனைகள், பரிசோதனை கூடங்கள், மாநில அரசுகள் தரவு உள்ளட்டுக்கான உள்நுழைவு சான்றுகளை பெறுவதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.