பதஞ்சலி மருந்து கொரோனாவை தடுக்கும் என்றால்... தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதற்கு? ஐஎம்ஏ கேள்வி
டெல்லி: பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்து குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பதஞ்சலி மருந்து கொரோனா தடுக்கும் என்றால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதற்கு என்றும் இந்திய மருத்து சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்திலிருந்த கடந்த ஜூன் மாதமே யோகா குரு பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் 'கொரோனில்' என்ற மருந்தை அறிமுகம் செய்தது. இந்த மருந்து அறிவியல் பூர்வமாகச் சோதனை செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார். இருப்பினும், அறிவியல் ஆதாரங்களை எதையும் பதஞ்சலி நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பதஞ்சலி நிறுவனம் 'கொரோனில் கிட்' என்ற பெயரில் கொரோனானில் மருந்தின் மேம்படுத்தப்பட்ட மாதிரி ஒன்றை வெளியிட்டது. இந்த விழாவில் பாபா ராம்தேவ், மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், நிதின் கட்கரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
உலக சுகாதார அமைப்பு மறுப்பு
இந்த கொரோனில் கிட் உலக சுகாதார அமைப்பின் தர சான்றிதழ் திட்டத்தின் கீழ் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் ஒப்புதல் பெறப்பட்ட ஒன்று என்று கூறப்பட்டது. உலக சுகாதார அமைப்பும் இந்த கொரோனில் மருந்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் பரவியது. ஆனால், இந்த செய்திக்கு உலக சுகாதார அமைப்பு முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு எந்தவொரு பாரம்பரிய மருத்துவத்தின் செயல்திறனையும் உலக சுகாதார அமைப்பு மதிப்பாய்வு செய்யவோ ஒப்புதல் அளிக்கவோ இல்லை என்று ட்விட்டரில் விளக்கம் அளித்திருந்தது.
இந்திய மருத்துவ சங்கம்
இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் இந்த செயல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், "நாட்டின் சுகாதார அமைச்சராக இருப்பவர், இதுபோன்ற தவறான திட்டத்தை வெளியிடுவது எந்த வகையில் சரியான ஒரு அணுகுமுறை? இதுபோன்ற பொய்யான, அறிவியலுக்குப் பொருத்தமற்ற ஒரு மருந்தை வெளியிடுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
சரமாரி கேள்வி
மருத்துவராக இருக்கும் நாட்டின் சுகாதா துறை அமைச்சர் அறிவியல் முறையில் நிரூபிக்கப்படாத இதுபோன்ற மருந்துகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், "சுகாதார துறை அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத இந்த மருந்தை உலக சுகாதார அமைப்பு நிராகரித்துள்ளது. இது நாட்டு மக்களுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய ஒரு அவமானம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி எதற்கு
மேலும், கொரோனில் மருந்து கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் என்றால், பின் ரூ. 35 ஆயிரம் கோடி செலவில் அரசு எதற்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்கிறது? என்றும் இந்திய மருத்துவ சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்கள் உட்பட முன்களப் பணியாளர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.