பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சீரியசாக களமிறங்கிவிட்டால் 6 மாதத்தில் தலைகீழ்தான்- மமதா நம்பிக்கை
டெல்லி: நாட்டின் எதிர்க்கட்சிகள் அனைத்தும் முழு வீச்சில் களமிறங்கிவிட்டால் அடுத்த 6 மாதங்களில் அரசியல் களம் தலைகீழாக மாறிவிடும் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 5 நாள் பயணமாக முகாமிட்டுள்ளார் மமதா பானர்ஜி. இன்று டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை மமதா பானர்ஜி சந்திக்கிறார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் மமதா பானர்ஜி கூறியதாவது: பெகாசஸ் என்பது என்ன? வைரஸ்களால் நிரப்பப்பட்ட ஒரு மென்பொருள். நமது பாதுகாப்பு என்பது ஆபத்தில் உள்ளது. யாருக்கும் இந்த நாட்டில் சுதந்திரம் என்பதும் இல்லை.
உ.பி. தேர்தல்: பிராமணர் வாக்குகளுக்கு மாயாவதியின் பி.எஸ்.பி குறி- மவுனமாக கடந்து போகும் பாஜக- ஏன்?
செல்போன் ஹேக்
என்னுடைய செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அபிஷேக் பானர்ஜியும் ஏற்கனவே ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. பிரசாந்த் கிஷோரின் செல்போனும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. பெகாசஸ் மூலம் ஒரு செல்போனை ஹேக் செய்தாலே பல போன்களை ஹேக்கிங் செய்துவிட முடியும். மனிதர்களுக்கு இது மிகவும் பேராபத்தானது.
எமர்ஜென்சியைவிட மோசம்
1975 எமர்ஜென்சியைவிட நாடு மிக மோசமாக, அபாயகட்டத்தில் உள்ளது. நமக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிறோம்.
எதிர்க்கட்சிகள் கூட்டமைப்பு
சில மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. அரசியல் கட்சிகள் அவ்வப்போது சந்தித்து ஆலோசனைகளை நடத்தி கொண்டுதான் இருக்கின்றன. நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்ததும் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து ஆலோசனை நடத்த உள்ளோம். அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து செயல்படுவதற்கு ஒரு அமைப்பு தேவை.
ஸ்டாலின் உள்ளிட்ட முதல்வர்கள்..
இன்று சோனியா காந்தியையும் கெஜ்ரிவாலையும் சந்திக்க உள்ளேன். நேற்று லாலு பிரசாத் யாதவை சந்தித்தேன். பாஜக ஆட்சியில் இல்லாத மாநில முதல்வர்களுடன் எப்போதும் நல்லுறவை கடைபிடித்து வருகிறேன். ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிஷாவின் நவீன் பட்நாயக், தமிழகத்தின் மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹேமந்த் சோரன் என அனைவருடனும் இணக்கமான நல்லுறவு தொடருகிறது.
ஆறு மாதங்களில் தலைகீழ் மாற்றம்
நாட்டின் எதிர்க்கட்சிகள் மட்டும் சீரியசாக களமிறங்கிவிட்டால் ஆறு மாதங்களில் எல்லாம் தலைகீழாக மாறிவிடும். எதிர்க்கட்சிகளின் அணிக்கு யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்று நடத்தலாம். அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்னுடைய கருத்தை நான் மற்றவர்கள் மீது திணிக்க முடியாது. இவ்வாறு மமதா பானர்ஜி தெரிவித்தார்.