ரயில் நிலையங்கள் இப்படி இருந்தா சுற்றுலா எப்படிங்க வளரும்.? மக்களவையில் விளாசிய குமரி எம்பி
டெல்லி: நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் வருகை தரும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களில், அடிப்படை வசதிகள் இல்லை. தூய்மையான கழிப்பறைகள் கூட இல்லை என்று மக்களவையில் தமிழக எம்பி எச்.வசந்தகுமார் குற்றம்சாட்டி பேசினார்.
அதே போல தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. இந்த சூழலில், கன்னியாகுமரிக்கு வரும் வெளியூர் மற்றும் வெளிமாநில மக்கள் எந்த அழகான இடத்தைப் பார்க்க முடியும் என கேள்வி எழுப்பினார்,
அதே போல ரயில்வேயில் பணிபுரியும் 13 லட்சம் மக்களின் நலன்களை பாதுகாக்க நாங்கள் உள்ளோம் என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
குவியும் பிற கட்சியினர்.. திமுகவுக்குள் வெடித்து கிளம்பும் பூசல்கள்.. அதிகரிக்கும் முணுமுணுப்பு
இவ்வளவு குறைபாடு இருந்தா எப்படி
உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். ஆனால் அங்குள்ள ரயில் நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லை. இப்படிப்பட்ட குறைபாடுகளை வைத்து கொண்டு தான் இந்தியாவை சுற்றுலா நாடாக உருவாக்க நாம் விரும்புகிறோம். நாட்டிலுள்ள 543 எம்.பி.க்களும் கன்னியாகுமரிக்கு வருகை தந்து அதன் அழகை ரசிக்க விரும்புகிறார்கள். ஆனால் முறையான உள்கட்டமைப்பு இல்லை. அப்படியே அவர்கள் அங்கு வந்தாலும் சூரிய உதயத்தை மட்டும் பார்த்து அனுபவித்து விட்டு செல்ல முடி யும் வேறு எதையும் அவர்களால் கண்டு களிக்க முடியாது என குறிப்பிட்டார்.
வந்தா 5 நாளாவது தங்க வேண்டாமா
நாம் சுற்றுலாவை வளர்க்க விரும்பினால், பயணிகள் ஒரு இடத்திற்கு வந்தால் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை தங்க வேண்டும். அப்போது தான் சுற்றுலா பிரிவு மூலம் நல்ல வருவாய் அரசுக்கு கிடைக்கும் கன்னியாகுமரியை பொருத்த வரை எங்களுக்கு இன்னும் அதிக ரயில்கள் தேவை என கோரிக்கை விடுத்தார்.
ரயில்வே தொழிலாளர்களுக்கு உறுதி தாங்க
மேலும் பேசிய வசந்தகுமார் எனது சகோதர சகோதரிகள் ரயில்வேயில் வேலை செய்கிறார்கள். ரயில்வேயில் கிட்டத்தட்ட 13 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். ஆனால் வெளிநாட்டு முதலீடு மற்றும் ரயில் பாதைகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் புதிய திட்டத்தால் அவர்கள் எப்போது வேலையிழப்போமோ என்ற அச்சத்தில் வாழ்கின்றனர்.மக்களும் ரயில்வே தனியார் மயம் ஆக்கப்படுவதை விரும்பவில்லை எனவே ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படுமா என்பதை துறை அமைச்சர் தயவு செய்து தெளிவுபடுத்த வேண்டும். ரயில்வேயில் பணியாற்றும்13 லட்சம் பேருக்கு பிரதமர் ஒரு உறுதிமொழியை வழங்க வேண்டும் ரயில்வே பணியாளர்களை கலந்தாலோசிக்காமல் தனியார் மயமாக்காது என்று என கூறினார். ரயில்வேயில் பணிபுரியும் 13 லட்சம் மக்களின் நலன்களை பாதுகாக்க நாங்கள்உள்ளோம் என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்
வார இறுதியில் கூடுதல் சேவை
மேலும் ரயில் எண் 22657/58 டிபிஎம்-என்சிஜே எஸ்எஃப் எக்ஸ்பிரஸ் வாரந்தோறும் மூன்று முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது, இதனால் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில் வரை வார இறுதி, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பயணம் செய்ய மக்கள் பல கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதே போல கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் எப்போதும் முழு கொள்ளளவோடு தான் இயங்குகின்றன, இதில் டிக்கெட் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல எனவே, இந்த வார இறுதியில் கூடுதல் சேவையை வழங்குவோம் என்ற உறுதியை தற்போதே தர பரிசீலிக்குமாறு கோரினார்