குடியுரிமை மசோதாவை மீண்டும் சிவசேனா ஆதரித்தால் உத்தவ் தாக்கரே அரசுக்கான காங். ஆதரவு வாபஸ்?
டெல்லி: மத்திய அரசின் சர்ச்சைக்குரிய குடியுரிமை மசோதாவை ராஜ்யசபாவிலும் சிவசேனா ஆதரித்தால் மகாராஷ்டிரா அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற காங்கிரஸ் தயங்காது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்துத்துவா கட்சியான சிவசேனாவுடன் மிகப் பெரும் தயக்கத்துடனேயே என்சிபி, காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தன. பாஜகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுக்க வேண்டும் என மதச்சார்பற்ற கட்சிகள் வலியுறுத்தியதால் சிவசேனாவுடன் காங்கிரஸ் மேலிடம் கைகோர்த்தது.
இதனையடுத்து மூன்று கட்சிகளும் குறைந்தபட்ச பொதுச்செயல் திட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ளன. அதேநேரத்தில் அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் முழுமை அடையவில்லை.
இந்நிலையில் லோக்சபாவில் மத்திய அரசின் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த மசோதாவை சிவசேனா ஆதரித்தது. தேசத்தின் நலன் கருதியே இம்முடிவை எடுத்ததாக சிவசேனா கூறியது.
இதனை காங்கிரஸ் விரும்பவில்லை. இதை வெளிப்படுத்தும் வகையில்தான் மசோதாவை ஆதரிப்பவர்களும் நாட்டின் அடித்தளத்தை சீர்குலைக்கின்றனர் என ராகுல் காந்தி விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டார்.
இது தேசிய அளவில் பெரும் விவாதமானது. பின்னர், நாங்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதில் கிடைக்காவிட்டால் ராஜ்யசபாவில் குடியுரிமை மசோதாவை ஆதரிக்கமாட்டோம் என சிவசேனா அந்தர்பல்டி அடித்தது.
இந்நிலையில்தான் இன்று ராஜ்யசபாவில் குடியுரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான வாக்கெடுப்பிலும் சிவசேனா, பாஜக அரசை ஆதரித்தால் அடுத்த நிமிடமே மகாராஷ்டிரா அரசுக்கான ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெற தயங்காது என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.,
சிவசேனாவின் இந்த இரட்டை நிலைப்பாட்டில் ராகுல் காந்தி கடும் அதிருப்தியில் இருக்கிறார் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.