தவறான புகாரை வாபஸ் பெறாவிட்டால் அவதூறு வழக்கு.. ஆம் ஆத்மிக்கு கவுதம் கம்பீர் வார்னிங்!
டெல்லி: தன் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளை வாபஸ் பெறவில்லை என்றால், ஆம் ஆத்மி வேட்பாளர் ஆதிஷி மற்றும் அக்கட்சி தலைவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாக பாஜக வேட்பாளரும் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் எச்சரித்துள்ளார்.
டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் 6-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் ஆதிஷி களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஆதிஷி, பெண் என்றும் பாராமல் தம்மை பற்றி மிகவும் மோசமாக விமர்சித்து கம்பீர் சார்பில் துண்டு பிரசுரங்கள் மக்களிடம் விநியோகிக்கப்பட்டதாக கூறி கண்ணீர் விட்டு அழுதார். பிட் நோட்டிஸில் தாம் மாட்டு இறைச்சி உண்பவள் என்றும், பாலியல் தொழிலாளி என்றும் கீழ்தரமாக விமர்சித்திருந்ததாக குற்றம்சாட்டினார்.
டெல்லியில் வாக்குப்பதிவு நாளில் அதிகாலை 4 மணிக்கே மெட்ரோ ரெயில் சேவை!
இந்த சம்பவம் தேசியளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆதிஷியின் குற்றச்சாட்டை அடுத்து ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் கம்பீருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
ஆனால் ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள கம்பீர். நான் தான் இந்த கீழ்தரமான செயலில் ஈடுபட்டேன் என்பதை ஆதிஷியும், கெஜ்ரிவாலும் நிரூபித்தால், போட்டியிலிருந்து விலகி வேட்புமனுவை வாபஸ் பெறுகிறேன். அப்படி நிரூபிக்காவிட்டால் நீங்கள் இருவரும் அரசியலிலிருது விலகி விடுகிறீர்களா என சவால் விடுத்தார்
இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியளித்துள்ள கம்பீர் ஆதிஷிக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகித்தவர்களை கண்டிப்பதாக கூறினார். எனது குடும்பத்தினர் பெண்களுக்கு எவ்வாறு மதிப்பு, மரியாதை அளிக்க வேண்டும் என்பதை கற்று கொடுத்துள்ளனர். இந்த கீழ்தரமான செயலில் நான் ஈடுபடவில்லை.
அரசியல் லாபத்திற்காக என் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள ஆம் ஆத்மி தலைவர்கள், தங்களது கருத்துகளை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் அவர்கள் நான் தொடரப் போகும் அவதூறு வழக்கை சந்திக்க தயாராக இருக்கட்டும் என காட்டமாக கூறியுள்ளார்.