தினசரி ரூ.2000, மாதம் ரூ.62,500 சம்பாதித்தால் வரி இல்லை.. பட்ஜெட்டில் சொன்ன முக்கிய விஷயமே இதுதான்!
புதிய வருமான வரி விதிப்பு முறையில் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை இருந்தால் வருமான வரி செலுத்த வேண்டிய தேவையில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் புதிய வருமான வரி தேர்வு செய்த தனிநபர்களின் 7 லட்சம் வரை ரிபேட்டுடன் (Tax Rebate) கூடிய வரி விலக்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். இதன்மூலம் இந்தியாவில் தினமும் ரூ.2 ஆயிரம், மாதம் ரூ.62,500 வரை சம்பளம் பெறுவோர் அல்லது வியாபாரம், தொழில் முறையில் சம்பாதிப்போர் வரி செலுத்த வேண்டியது இல்லை. இது யாருக்கு பொருந்தும். இதனை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய விபரம் வருமாறு:
2023-2024ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் அவர் அறிவித்துள்ளார். பட்ஜெட்டின் இறுதியாக தனிநபர் வருமான வரி சார்ந்த முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
அடித்தது "ஜாக்பாட்".. ரூ. 7 லட்சம் வரையில் இனி ஜீரோ வருமான வரி.. அதிரடி அறிவிப்பு.. முழு விபரம்!
பழைய வருமான வரியில் மாற்றமில்லை
இந்தியாவில் தற்போது வருமான வரி செலுத்த 2 நடைமுறைகள் உள்ளன. ஒன்று பழைய வருமான வரி முறை (Old Regime), இன்னொன்று புதிய வருமான வரி முறை (New Regime). இன்றைய பட்ஜெட்டில் பழைய வருமான வரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் பழைய வருமான வரி விதிப்பு முறையை கடைப்பிடிக்கும் தனிநபரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் வரை இருந்தால் வரி செலுத்த வேண்டாம். ரூ.2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் இருந்தால் 5 சதவீதமும், ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை சம்பளம் அல்லது வருமானம் இருந்தால் 20 சதவீதமும், 10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவீதமும் வரி செலுத்த வேண்டி இருக்கும்.
ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை
மாறாக புதிய வருமான வரி முறையில் முக்கிய அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதன்படி அதாவது புதிய வருமான வரி முறையில் ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபருக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என கூறினார். இது இதற்கு முன்பு ரூ.5 லட்சமாக இருந்த நிலையில் தற்போது ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பலனை பெற என்ன செய்ய வேண்டும்?
புதிய வருமான வரி முறையில் வருமான வரி செலுத்தும் தனிநபரின் ஆண்டு வருமானம் இனி ரூ.7 லட்சமாக இருந்தால் அவர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம் என்று இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை பெறுவதில் பலருக்கும் குழப்பம் இருக்கலாம். இருப்பினும் அவர்கள் தங்களின் செலவீனங்கள் உள்ளிட்ட ஆவணங்களை முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும். இதை செய்தால் புதிய வருமான வரி முறையில் வருமான வரி செலுத்துவோர் ரூ.7 லட்சம் வரை வரி செலுத்த வேண்டியது இல்லை.
தினமும் ரூ.2 ஆயிரம் சம்பாதித்தால் வரி இல்லை
இந்த அறிவிப்பின்படி பார்த்தால் தினசரி சம்பளமாக ரூ.2 ஆயிரம் பெறுவோர், அல்லது தொழில் வழியாக ரூ.2 ஆயிரம் ஈட்டுவோர் வரி செலுத்த வேண்டாம். மாதத்தின் அடிப்படையில் பார்த்தால் மாத சம்பளம் ரூ.62,500 பெறுவோர் அல்லது மாதம் ரூ.62,500 வரை தொழில் முறையில் வருமானம் ஈட்டுவோர் வருமான வரி செலுத்த தேவையில்லை. இது புதிய வருமான வரி முறையில் இருப்போரின் ஆண்டு செலவீன ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே இந்த வருமான வரி சலுகையை பெற முடியும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூ.3 லட்சம் வரை ஜீரோ வரி
மேலும் புதிய வருமான வரி முறையில் ரூ.2.5 லட்சம் வரையிலான ஜீரோ வரி விதிப்பின் உச்ச வரம்பு ரூ.50 ஆயிரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிய வருமான வரி முறையில் ரூ.3 லட்சம் வரை சம்பளம் பெறுவோர் அல்லது வருமானம் ஈட்டுவோர் எந்த வருமான வரியையும் செலுத்த வேண்டாம். அதாவது ரூ.3 லட்சம் வரை வருமான வரி சார்ந்த ரிட்டர்ன்ஸ் எதுவும் பைல் செய்ய வேண்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.