பொன் மாணிக்கவேல் நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது- உச்சநீதிமன்றம்
பொன் மாணிக்கவேல் நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டது.
Recommended Video
டெல்லி: ஐஜி பொன் மாணிக்கவேல் நியமனத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. "எங்களை பொன்.மாணிக்கவேல் கொடுமைப்படுத்துகிறார்" என்று 66 போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து சாமி சிலைகளை கடத்தி கொண்டு போய் சர்வதேச அளவில் விற்பனை செய்யும் செயல் அதிகரித்து வந்தது ஆன்மீகவாதிகளை மட்டுமல்லாமல், கலை ஆர்வலர்களையும் கவலைக்குள்ளாக்கியது.
இந்த நிலையில், சிலை திருட்டு தடுப்புப் பிரிவுக்கு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுவை சிறப்பு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் நியமனம் செய்தது.
குற்றவாளிகள் கைது
அன்றிலிருந்து தீயாய் வேலை செய்த பொன் மாணிக்கவேல், பல சிலைகளை பறிமுதல் செய்தார். பல குற்றவாளிகளைக் கைதும் செய்தார். பல முக்கியஸ்தர்களும் இதில் அடக்கம். ஆனால் பொன். மாணிக்கவேலுவை சிலை கடத்தல் பிரிவிலிருந்து மாற்ற வேண்டும் என்று அரசுத் தரப்பிலேயே முயற்சித்தனர். ஆனால் ஹைகோர்ட் அதைத் தடுத்து விட்டது.
மீண்டும் நியமன உத்தரவு
பொன் மாணிக்கவேல் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் அவருக்குப் பதில் அரசு வேறு ஒருவரை சிலைக் கடத்தல் பிரிவுக்கு தலைவராக நியமித்தது. ஆனால் ஹைகோர்ட் அதை ரத்து செய்து பொன் மாணிக்கவேலுவே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அவருக்குரிய எந்த வசதியையும் அரசுத் தரப்பில் இன்னும் செய்து தராமல் அலைக்கழித்து வருவது தனிக்கதை.
டிஜிபி அலுவலகத்தில் புகார்
இந்த நிலையில், 23 போலீஸ்காரர்கள் பொன் மாணிக்கவேலுக்கு எதிராக திரும்பினார்கள். இவர்கள் அனைவரும் சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் அதிகாரிகள் ஆவர். சிலை கடத்தல் வழக்கை சிபிஐயிடமே ஒப்படைக்குமாறும், பொய் வழக்கு போட சொல்லி எங்களை எல்லாம் பொன். மாணிக்கவேல் மிரட்டுகிறார் என்றும் இவர்கள் 23 பேரும் டிஜிபி அலுவலகத்தில் புகாரும் தந்தனர்.
66 போலீசார்கள்
இந்த நிலையில் திடீரென 66 போலீசார்கள் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேலுவை நியமித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றுவிட்டனர். இந்த 66 பேரில் எஸ்பி., ஏடிஎஸ்பி உள்ளிட்டோரும் அடக்கம்.
நியமனமே தவறு
அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஓய்வு பெற்ற அதிகாரியை மீண்டும் விசாரணை அதிகாரியாக நியமிக்க ஹைகோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை, மாநில அரசின் வரம்புக்குள் நுழைந்து இது போன்ற சிறப்பு விசாரணை அதிகாரியாக பொன்.மாணிக்கவேலுவை நியமித்தது தவறு.
கொடுமைப்படுத்துகிறார்
பொன்.மாணிக்கவேல் தங்களது விசாரணையில் தலையிட்டு, தங்களை எல்லாம் கொடுமைப்படுத்துகிறார் என்றும் 66 போலீசாரும் தங்கள் மனுவில் குற்றம் சாட்டி இருந்தனர். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
வழக்கு ஒத்திவைப்பு
விசாரணைக்குப் பின்னர் பொன் மாணிக்கவேல் நியமனத்திற்குத் தடை விதிக்க மறுத்து கோர்ட் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அதற்கு முன் சிலை கடத்தல் விசாரணை தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும் உத்தரவிட்டது.