மாமாவுக்கு வயசாயிருச்சு... அத்தை மீது ஆசையில் ஆள்வைத்து கொன்ற மருமகன் - கூலி 7000 மட்டுமே
டெல்லி: வயது அதிகம் கொண்ட ஆணுக்கும் வயது குறைவான பெண்ணுக்கும் திருமணம் நடந்தால் ஒரு கட்டத்தில் வெறுப்புதான் வரும், அந்த வெறுப்பு இன்னொருவர் மீது பாசத்தை ஏற்படுத்தி கள்ளக்காதலை உருவாக்கும். வயதுக்கு மீறிய பெண்ணுடன் இளைஞனுக்கு ஏற்பட்ட தொடர்பு கொலை வரை சென்றுள்ளது. 52 வயது மாமாவிற்கு 34 வயது அத்தையா என்று நினைத்து கள்ள உறவில் ஈடுபட்ட அந்த இளைஞன், மாமாவை கொன்று விட்டு கொலைப்பழியுடன் இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறார். டெல்லியில் இந்த படுபாதக சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெறும் 7000 ரூபாய்க்கு கொலை செய்துள்ளனர் கூலிப்படையினர்.
டெல்லியின் தெற்கு அவென்யூவில் உள்ள செர்வண்ட் குவார்ட்டர்ஸ் பகுதியில் இருந்த ஒரு வீட்டில் கடந்த 7ஆம் தேதி 52 வயதான ஒரு நபர் கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இவரை கொன்றவர் யார் எதற்காக இந்த கொலை நடந்தது என்று டெல்லி போலீஸ் மண்டையை குடைந்து கொண்டு விசாரணை நடத்தியது.
கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் குமார் என்று தெரியவந்தது. அவரது மனைவி பெயர் அஞ்சு. குமாருக்கும் அஞ்சுவிற்கும் கிட்டத்தட்ட 18 வயது வித்தியாசம் இருந்தது. வயதானவர் போல தோற்றமளித்த குமாருக்கும், இளம் பெண் போல தோற்றமளித்த அஞ்சுவிற்கும் ஏழாம் பொருத்தமாக இருந்துள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டான் அஞ்சுவின் தூரத்து உறவினரான 20 வயது இளைஞன் சிவா.
குமாரின் நடவடிக்கை
கொலை செய்யப்பட்ட குமாருக்கு 52 வயதாகிறது. சூதாட்டமே வாழ்க்கையாகி போனது. அழகான மனைவி இருந்தும் அதை அனுபவிக்க ஆசையில்லை. சூதாட்ட போதையில் மனைவி சொல் கேட்பதில்லை. அதையும் மீறி அஞ்சு தட்டிக்கேட்டால் அடி உதைதானாம். இதனை அஞ்சுவின் தூரத்து உறவினரான சிவாவிடம் கூறி அழுவாராம். ஆறுதல் சொல்லப்போன சிவா, அப்படியே தனக்கு சாதகமாக அத்தையை மாற்றி விட்டான்.
நெருக்கத்தில் தவறு
வயதான கணவனுடன் சுகமில்லை, அடி உதைதான் என்று அலுத்துப்போயிருந்த அஞ்சுவிற்கு சிவா உடனான நெருக்கம் ஆறுதலை தந்தது. தன்னை விட 14 வயதான இளைஞன் என்றும் பாராமல் நெருக்கமாக பழகினார். இந்த நெருக்கம் குமாருக்கு தெரியவரவே பிரச்சினை பூதாகரமானது. அஞ்சுவிற்கு அடி உதையும் அதிகரித்தது.
கழுத்து அறுத்து கொலை
சிவா உடனான நெருக்கத்தில் கணவனை கை கழுவ தயாரானார் அஞ்சு. தனது கணவனை தீர்த்துக்கட்ட சிவாவிடம் பேசினாள். குமாரை கொன்று விட்டு அத்தையை நிரந்தரமாக தன்னுடன் வைத்துக்கொண்டால் சாப்பாடு பிரச்சினை தீரும், செலவுக்கும் பணம் கிடைக்கும் என்று நினைத்த சிவா, கூலிப்படையை ஏற்பாடு செய்தான். 7000 ரூபாய் பேசி அதற்கு முன்பணமாக 2000 ரூபாயை கொடுத்தார். ஜூன் 7ஆம் தேதி கொலைக்காக கெட்ட நேரம் குறித்தான் சிவா. மைனர் சிறுவர்களை தயாராக வரச்சொன்னான்.
அத்தையும் உடந்தை
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு அஞ்சு தனது குழந்தையை அழைத்துக்கொண்டு கீழே இறங்கிப் போனாள். வீட்டில் குமார் தனியாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது சிவா, தன்னுடன் கூலிப்படையினரை அழைத்துக்கொண்டு குமார் இருந்த அறைக்குள் நுழைந்தான். நடப்பதை உணர்ந்து சுதாரிப்பதற்குள் சிவா குமாரின் கையை பிடித்துக்கொள்ள கூலிப்படையினர் அவரது கழுத்தை அறுத்துபோட்டனர். எல்லாம் சில நிமிடங்களில் முடிந்து போனது.
போலீஸ் விசாரணை
சூதாட்ட தகராறு முன்விரோதத்தில் நடந்த கொலை என்று அஞ்சு நாடகமாடினாலும் அவரது நடவடிக்கைகள், செல்போன் பேச்சுக்கள் எதுவுமே நம்பும்படியாக இல்லை. போலீஸ் தங்கள் பாணியில் விசாரித்ததை அடுத்து உண்மையை ஒத்துக்கொண்டார் அஞ்சு. தகாத உறவுக்காக கூலிப்படை ஏற்பாடு செய்து குமாரை கொன்ற சிவாவையும், கூட வந்த நபரை போலீசார் கைது செய்தனர். ஒருவன் தப்பி ஓடி விடவே அவனை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளத்தொடர்பு கொலைகள்
அஞ்சுவிற்கு சிவா மருமகன் முறை. தூரத்து உறவினர். தனது வீட்டிற்கு வந்து போய்க்கொண்டிருந்த சிவாவை வயது குறைவான நபர் என்றும் பார்க்காமல் தகாத உறவை ஏற்படுத்திக்கொண்டு கணவனை கொன்றுள்ளார். கள்ள உறவுகள் பெரும்பாலும் கொலையிலும் தற்கொலையிலும்தான் முடிகின்றன. ஒரே வாரத்தில் கொலையாளிகளை கண்டு பிடித்து தீர்வு கண்டுள்ளனர் டெல்லி போலீசார். தப்பு செய்தவர்கள் ஏதாவது தடையத்தை விட்டு விட்டு சென்று சிக்கிக்கொள்வார்கள் என்பதை இந்த கொலை சம்பவம் உணர்த்துகிறது.