கர்நாடகத்தை உலுக்கிய நகை கடை மோசடி வழக்கு.. ஐஎம்ஏ நிறுவனர் மன்சூர் கான் டெல்லியில் கைது
Recommended Video
டெல்லி: பெங்களூரு சிவாஜி நகரில் ஐ மானிட்டரி அட்வைஸரி என்ற பெயரில் நகை கடை நடத்தி, மோசடி செய்தாக புகார் கூறப்பட்ட அதன் உரிமையாளர் மன்சூர் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசடி வழக்கில் தலைமைறவாகி துபாயில் இருந்த அவர் இன்று காலை டெல்லி வந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் வைத்து அமலாக்க துறையினர் மற்றும் சிறப்பு விசாரணை குழுவினர் மன்சூர் கானை கைது செய்துள்ளனர்.
மோசடி வழக்கு தொடர்பாக அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமலாக்க துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். முன்னதாக ஐஎம்ஏ நகைக் கடை அதிக வட்டி தருவதாக கூறி வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலித்தது. ஐஎம்ஏ குழுமத்தில் முதலீடு செய்தால், முதலீடு செய்த தொகைக்கேற்ப மாதா மாதம் 2 முதல் 3 சதவீதம் வரை வட்டி கிடைக்கும் என்ற கவர்ச்சிகரமான வாக்குறுதி தரப்பட்டது.
இதனை நம்பிய சுமார் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஐஎம்ஏ-வில் முதலீடு செய்தனர். சுமார் ரூ.1,600 கோடி முதலீட்டு பணத்துடன் திடீரென தலைமறைவானார் ஐஎம்ஏ நிறுவனர் மன்சூர் கான். இதனால் அதிர்ச்சியில் உறைந்தனர் முதலீடு செய்தவர்கள். மாநிலத்தை உலுக்கிய இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய மன்சூர் கானை கைது செய்ய கோரிக்கை வலுத்தது. இதனையடுத்து மோசடி வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக அடுத்தடுத்து பெங்களூரு நகர போலீஸ் உதவி கமிஷனர், பெங்களூரு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடியில் தொடர்புடைய மன்சூர் கான் வெளியிட்டதாக கூறப்பட்ட ஆடியோ ஒன்றும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அந்த ஆடியோவில் கர்நாடகாவிலுள்ள முக்கிய அரசியல்வாதிகள் பலர் தன்னை ஏமாற்றி விட்டதாக மன்சூர் கான் குற்றம்சாட்டியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சிவாஜிநகர் எம்எல்ஏ ரோஷன் பெய்க், ரூ.400 கோடியை தன்னிடம் வாங்கிவிட்டு திருப்பித் தர மறுப்பதாகவும், இதனால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் மன்சூர் கான் கூறியிருந்தார் என தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த விவகாரத்தை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் ரவிகாந்தே கவுடா கூறுகையில், துபாயில் இருந்த ஐஎம்ஏ நிறுவனர் மன்சூர் கானை தொடர்பு கொண்டு, மீண்டும் இந்தியாவுக்கு வந்து சட்டத்தின் முன் ஆஜராகும்படி வலியுறுத்தினோம் அப்படி இல்லையெனில் துபாய்க்கே வந்து கைது செய்ய நேரிடும் என எச்சரித்தும்
இந்நிலையில் துபாயில் இருந்து டெல்லி திரும்பிய அவரை இன்று காலை கைது செய்து மோசடி வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றார்.