Rain alert: அடுத்த 3 நாட்களுக்கு அடித்து நொறுக்கப்போகும் கனமழை.. தமிழகம் & கேரளாவுக்கு எச்சரிக்கை
டெல்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு, கேரளா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்து சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 23 பேர் உயிரிழந்தனர்.
அண்டை மாநிலமான கேரளாவில் பெய்யும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில் கேரளாவில் மட்டும் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
பள்ளி அருகே டாஸ்மாக்.. தனி ஆளாக போராடிய மாணவி.. சில மணி நேரத்தில் பறந்த தலைமை செயலாளரின் உத்தரவு
கேரளா ஆரஞ்சு அலர்ட்
இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் 24 மணி நேரத்தில் 20 செமீ மழை பெய்ய வாய்ப்பிருந்தால், அங்கு ரெட் அலர்ட்டும், 6 -20 செமீ மழை பெய்ய வாய்ப்பிருந்தால் ஆரஞ்சு அலர்டும், 6 -11 செமீ மழை பெய்ய வாய்ப்பிருந்தால் மஞ்சள் அலர்டும் கொடுக்கப்படும்.
நிரம்பும் அணைகள்
இதனால் கேரளாவில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளா மாநிலத்தில் உள்ள 10 முக்கிய அணைகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இடுக்கி, இடமலையார், பம்பா மற்றும் காக்கி உட்பட மொத்தம் 78 அணைகளில் உபரி நீரைத் திறந்துவிட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது இது நான்காவது முறையாகும்.
தமிழ்நாடு வானிலை
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தீவிர மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரகண்ட் மாநிலம்
கடந்த சில நாட்களாக வெள்ளத்தில் தத்தளித்து வரும் உத்தரகண்ட் மாநிலத்தில் மழையின் அளவு அடுத்த 3 நாட்களுக்குக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அக். 23ஆம் தேதி முதல் உத்தரகண்ட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர காஷ்மீர், லடாக் ஆகிய இடங்களில் மழை அல்லது பனிப்பொழிவு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதர மாநிலங்கள்
இந்தியாவின் இதர பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தீவிர மழையும், அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் அதி தீவிர கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.