பதற்றத்திற்கு இடையே இம்ரான் கானுக்கு மோடி கடிதம்.. காங்கிரஸ் கண்டனம்
டெல்லி: பாகிஸ்தான் தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தேசிய தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, பிரதமர் மோடி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த, கடிதத்தில், தேசிய தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தீவிரவாதம் வன்முறை இல்லாத சூழலில், ஜனநாயகம், அமைதி, வளர்ச்சி, செழுமை ஆகியவற்றுக்காக தெற்காசிய மக்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணம் இதுவாகும். இவ்வாறு தெரவிக்கப்பட்டுள்ளது.
பாஜக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல்.. பூரியில் நரேந்திர மோடி போட்டியில்லை
|
இம்ரான்கான் ட்வீட்
இந்த வாழ்த்து செய்தி பெறப்பட்டதை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளர். மேலும், மோடியின் வாழ்த்துச்செய்தியை வரவேற்பதாகவும், இரு நாடுகளும் காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண விரிவான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரம் வந்துள்ளது. இவ்வாறு இம்ரான் கான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
போர்ப் பதற்றம்
புல்வாமாவில் இந்திய துணை ராணுவப் படையினர் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்திதற்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு மிகவும் மோசமானது. இந்தியா எல்லை தாண்டிச் சென்று, பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தனது எப் 16 போர் விமானங்களை பயன்படுத்தி காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த முயன்றது.
இம்ரான் கானுக்கு வாழ்த்துச் செய்தி
பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய, விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டு பிறகு மீட்கப்பட்டார். இதுபோன்ற பெரும் போர் பதற்ற சூழ்நிலைக்கு நடுவே, பிரதமர் நரேந்திர மோடி, இம்ரான் கானுக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார்.
இந்தியா பதில்
நேற்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பாகிஸ்தான் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பிரிவினைவாத தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், இந்தியா அந்த நிகழ்ச்சியை புறக்கணித்திருந்த நிலையிலிலும், பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமருக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார். ஆனால் இது மரபு என்பதால் அனுப்பப்பட்ட கடிதம் எனவும், மோடி அதில் கையெழுத்திடவில்லை என்றும், இந்திய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இம்ரான்கான் இந்த தகவலை ட்விட்டரில் வெளியிட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
காதல் கடிதம் என்கிறது காங்கிரஸ்
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘பாகிஸ்தான் கட்டவிழ்த்து விடும் தீவிராவதத்தை பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடாமல் பாகிஸ்தான் பிரதமருக்கு நமது 56 அங்குல மார்புக்காரர் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். பாகிஸ்தானுக்கு காதல் கடிதங்கள் எழுதுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும், என்று கூறியுள்ளார்.