சுதந்திர தின உரை: பாகிஸ்தான் என்ற வார்த்தையை பயன்படுத்தாத மோடி.. கடுகு போல் பொறிந்து தள்ளிய இம்ரான்!
டெல்லி: பாகிஸ்தானில் நேற்று தனது சுதந்திர தின உரையில் இந்தியா, ஆர்எஸ்எஸ் பற்றியே பிரதமர் இம்ரான் கான் பேசிய நிலையில் இன்று நடைபெற்ற இந்தியா சுதந்திர தின விழா உரையில் பாகிஸ்தான் குறித்து ஒரு வார்த்தை கூட பிரதமர் நரேந்திர மோடி பேசவில்லை.
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா கடந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. அன்று முதல் ஆகஸ்ட் 15-ஆ்ம தேதியை நாம் சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறோம். ஆனால் பாகிஸ்தானோ ஆண்டுதோறும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறது.
இந்த நிலையில் நேற்று பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்போது பிரதமர் இம்ரான் கான் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் தனது உரையில் முழுக்க முழுக்க காஷ்மீர், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ், இந்தியா ஆகியவை குறித்தே பேசியுள்ளார்.
23 முறை பயன்பாடு
சித்தாந்தம் என்ற வார்த்தையை இம்ரான் கான் அடிக்கடி பயன்படுத்தி வந்தார். அவர் இந்த வார்த்தையை 23 முறை பயன்படுத்தினார். அடுத்தபடியாக காஷ்மீர் என்ற வார்த்தையை 20 முறை பயன்படுத்தினார். பின்னர் மக்கள் என்ற வார்த்தையை 14 முறை பயன்படுத்தினார்.
காஷ்மீர்
அதிலும் காஷ்மீர் மக்கள் என்ற வார்த்தையை 17 முதல் 18 முறை தனது பேச்சில் இம்ரான் பயன்படுத்தினார். பாகிஸ்தான் என்ற வார்த்தையை 12 முறை மட்டுமே அவர் பயன்படுத்தியுள்ளார். இது காஷ்மீர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதை விட மிகவும் குறைவாகும்.
இம்ரான் கான்
இது தவிர்த்து பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் இயக்கம், ஹிட்லரின் நாசி இயக்கத்துடன் ஆர் எஸ் எஸ் இயக்கம் ஒப்பீடு ஆகியவற்றை இம்ரான் பயன்படுத்தினார். பாகிஸ்தானை 12 முறை பயன்படுத்திய இம்ரான், இந்தியா என்ற வார்த்தையை 11 முறை பயன்படுத்தியுள்ளார். ஆர் எஸ் எஸ் என்ற வார்த்தையை 10 முறை பயன்படுத்தியுள்ளார்.
சுதந்திர தின விழா
மோடி என்ற பெயரை 7 முறையும், நாசி என்ற வார்த்தையை 6 முறையும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று இந்தியாவில் 73ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி சுதந்திர தின உரையை ஆற்றினார்.
பாகிஸ்தான்
ஆனால் இம்ரான் கானை போல் பிரதமர் மோடி பேசவில்லை. அவர் தனது 92 நிமிடங்கள் உரையில் பாகிஸ்தான் என்ற வார்த்தையையோ பாகிஸ்தான் தொடர்பான வார்த்தையையோ மோடி ஒரு முறை கூட பயன்படுத்தவில்லை. ஆகஸ்ட் 19-ஆம் தேதி 100ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் ஆப்கானிஸ்தானுக்குகூட வாழ்த்துகளை மோடி கூறியிருந்தார். ஆனால் பாகிஸ்தான் குறித்து எதையும் பேசவில்லை.