பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக பேரணி நடத்துகிறாராம் இம்ரான்கான்!
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளார் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக்கியுள்ளது மத்திய அரசு.
இதையடுத்து பாகிஸ்தான் மற்றும் சீனா ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதிகளையும் மீட்கும் அதிரடிகளை மத்திய அரசு மேற்கொள்ளக் கூடும் என கூறப்படுகிறது. டெல்லியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங்கும் இதை உறுதிப்படுத்தியிருந்தார்.
ஏற்கனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை அந்த நாடு இழக்கும் சூழல் ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோவும் சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் காஷ்மீருக்காக மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசியது பாகிஸ்தான்.
இதற்கு இந்திய தரப்பில் பதிலடி தரப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களை முன்வைத்து பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் திடீரென பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைநகரான முசாஃபர்பாத்தில் நாளை மறுநாள் பேரணி நடத்தப் போவதாக இம்ரான்கான் அறிவித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து இந்த பேரணியை நடத்துகிறாராம் இம்ரான்கான்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அந்நாடு மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களை ஐநா மனித உரிமைகள் ஆணைய கூட்ட வளாகத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் பலர் அம்பலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.