நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா... முதல்முறையாக அணிவகுப்பில் கலந்துகொள்ளும் வங்கதேச ராணுவம்
டெல்லி: நாளை தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் முதல்முறையாக வங்கதேச ராணுவப் படையும் பங்கேற்க உள்ளது.
நாட்டின் 71ஆவது குடியரசு தினம் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மூவர்ண கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்கவுள்ளார்.
இதனால் தலைநகரில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படுவதைத் தடுக்க ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மக்கள் அதிகம் ஒன்றுகூடும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் ஆகியவற்றில் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வங்கதேச ராணுவம்
இந்நிலையில், நாளை நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் முதல்முறையாக வங்கதேச ராணுவப் படையும் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வங்கதேச ராணுவப் படையின் கமேண்டர் அபு முகமது ஷாஹ்னூர் ஷாவோன் தலைமையில் சுமார் 122 ராணுவ வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். வங்கதேச ராணுவத்தின் முப்படைகளைச் சேர்ந்த வீரர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
உதவிய இந்தியா
இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையே ராஜதந்திர உறவுகளைத் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. முன்பு. பாகிஸ்தானின் ஒரு பகுதியாகவே வங்கதேசம் இருந்து வந்தது. 1971ஆம் ஆண்டுதான் பாகிஸ்தானிலிருந்து பரிந்து வங்கதேசம் என்ற தனி நாட்டு உருவாக்கப்பட்டது. தனி நாடு கோரிய வங்கதேசத்திற்கு அந்த காலத்தில் இந்தியா பெரியளவில் உதவியிருந்தது.
முதல்முறை
இதைச் சிறப்பிக்கும் வகையிலும், வங்கதேசம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் கொண்டாடும் வகையிலும், குடியரசு தின விழா அணிவகுப்பில் வங்கதேச ராணுவப் படை பங்கேற்க உள்ளது. இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் வங்கதேச ராணுவம் கலந்துகொள்வது இதுவே முதல்முறையாகும்.
வெளிநாட்டு ராணுவம்
இதற்கு முன்னதாக இரு நாடுகள் இந்தியாவின் குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் கலந்துகொண்டுள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு பிரான்ஸ், 2017ஆம் ஆண்டு ஐக்கிய அமீரகம் ஆகி நாடுகளின் ராணுவப் படைகள் குடியரசு தின விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்
கொரோனா பரவல் காரணமாகப் பலத்த கட்டுப்பாடுகளுடனேயே குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ராணுவ வீரர்களின் மோட்டர் வாகன சாகச நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக, குடியரசு தின விழா நிகழ்ச்சிகளைக் காண 1.25 லட்சம் பேருக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் இம்முறை, வெறும் 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.