அதிமுகவின் ஆதரவு எனக்கு தான்! ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்த பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு!
டெல்லி: பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திரெளபதி முர்மு இன்று டெல்லியில் ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு கோரினார்.
ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ல் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த பள்ளியில் அட்மிஷனுக்கே லஞ்சமா?.. ரூ 6 லட்சத்தை ஏமாற்றியதாக பாஜக நிர்வாகி மதுவந்தி மீது புகார்
அதன்படி ஜூலை 18 ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. முடிவுகள் ஜூலை 21ல் அறிவிக்கப்பட உள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா களமிறக்கப்பட்டுள்ளார்.
மனுத்தாக்கல் செய்த திரெளபதி முர்மு
இந்நிலையில் டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பன்னீர் செல்வம் பங்கேற்பு
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்களும் பங்கேற்றனர். அதிமுக சர்பில் ஓ பன்னீர் செல்வம், தம்பிதுரை, ரவீந்திரநாத் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்காக ஓ பன்னீர்செல்வம் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றிருந்தார். வேட்பு மனுத்தாக்கலுக்கு பிறகு ஓ பன்னீர்செல்வம் அங்குள்ள இல்லத்தில் ஓய்வு எடுத்தார்.
பன்னீர் செல்வத்துடன் சந்திப்பு
இந்நிலையில் இன்று மாலையில் திரௌபதி முர்மு டெல்லியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். திரெளபதி முர்முவுடன் மத்திய இணையமைச்சர் எல் முருகன் உடன் வந்திருந்தார். இந்த சந்திப்பின்போது தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ உடனிருந்தனர்.
மனப்பூர்வ ஆதரவு
பின்னர் நிருபர்களுக்கு ஓ பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். அப்போது அவர் "ஜனாதிபதி தேர்தலில் அதிமுக சார்பில் திரௌபதி முர்முவுக்கு மனப்பூர்வமாக முழு ஆதரவு உண்டு. அதிமுகவின் ஆதரவுக்கோரி விரைவில் சென்னை வருவதாக திரௌபதி முர்மு கூறியுள்ளார்" என்றார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திரெளபதி முர்மு இன்று மனுத்தாக்கல் செய்த நிலையில் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருவது குறிப்பிடத்தக்கது.