மவுனம் கலைத்த மாயாவதி.. முதல் முறையாக ரபேல் குறித்து டுவிட்டரில் மனம் திறந்த தருணம்
டெல்லி: அண்மையில் டுவிட்டரில் இணைந்த மாயாவதி தனது டுவீட்டில் முதல்முறையாக ரபேல் விமானம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் பயன்படுத்திய காவலாளி என்ற வார்த்தையை அவரும் பயன்படுத்தியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 விமானங்களை கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் மத்திய அரசு முறைகேடு செய்ததாக ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் ராகுல் கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில் மோடி தான் இந்தியாவின் காவலன் என்று தெரிவித்திருந்தார். அதற்கு ராகுலோ காவலனே திருடன் என பதிலடி கொடுத்திருந்தார்.
இதுவரை ரபேல் குறித்து எதையும் பேசாமல் இருந்த மாயாவதி தற்போது டுவிட்டரில் முதல் முறையாக பேசியுள்ளார். ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழலற்ற தன்மையை அரசு கைவிட்டு விட்டது என்பதை இந்து நாளிதழ் சுட்டிக் காட்டுகிறது..
இந்த காவலன் மற்றும் தன்னை தானே நேர்மையானவர் என சொல்லிக் கொள்ளும் மோடியை என்ன செய்யலாம் என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டும். ஊழல், நேர்மை, தேசிய நலன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியன சரிகட்டப்பட்டுவிட்டது.
காவலன் மோடி அரசு பணத்தில் உலகம் முழுவதும் செல்கிறார். அவ்வாறு சென்றுவிட்டு அவர் நேர்மையானவர் மற்றும் ஊழல்வாதியில்லை என கூறிக் கொள்கிறார். பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி பேசும் போது ஊழல் செய்து விட்டு தப்பிப்பவர்களை விடமாட்டோம் என்று கூறிக் கொள்கிறார் என மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார்.