பிரதமர் மோடியால் பெரிய நிறுவனங்கள் தான் பயன்பெறுது! 51 சதவீத மக்கள் ஒப்புதல்! வெளியான சர்வே முடிவு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகள் பெரும் நிறுவனங்களுக்கு தான் சாதகமாக உள்ளதாக சிவோட்டர் சர்வேயில் 51 சதவீத மக்கள் பதிலளித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு 8 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. 2024ல் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் பாஜகவுக்கு முட்டுக்கட்டை போட்டு ஹாட்ரிக் வெற்றியை தடுக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
கூகுளுக்கு ஆஸ்திரேலியா கோர்ட் விதித்த மில்லியன் டாலர் அபராதம்; ஏன் தெரியுமா?
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
மத்திய அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக வேலையின்மை, பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் மத்திய பாஜக அரசு தோல்வியடைந்துள்ளது. இதனால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஏழை எளிய மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஏழை மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு பெரும் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதாகவும், பெரும் நிறுவனங்களுக்கு ஏற்ப கொள்கைகள் வகுப்பதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சி வோட்டர் சர்வே
இந்நிலையில் தான் இந்தியா டூடே மற்றும் சி-வோட்டர் சார்பில் பல்வேறு கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் பிரதமர் மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இதில் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் பற்றியும், அதனால் யாருக்கு பயன் என்பது தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
51 சதவீதம் பேர் ஒப்புதல்
இந்த சர்வேயில் 51 சதவீதம் பேர் பெரிய வணிகத்துக்கு தான் பிரதமர் நரேந்திர மோடி அரசின் கொள்கைகள் உதவியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் 10 சதவீதம் பேர் மட்டுமே சிறு வணிகர்களுக்கு மத்திய அரசு உதவி செய்வதாக கூறியுள்ளனர். மேலும் மாத சம்பளம் பெறுவோருக்கு பிரதமர் மோடியின் ஆட்சி சாதகமாக இருப்பதாக 9 சதவீதம் பேர் உள்ளனர். இதுபோக 9 சதவீதம் பேர் மட்டுமே பிரதமர் மோடியின் கொள்கைகள் விவசாயிகளுக்க நன்மை பயக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பொருளாதார கையாள்வது எப்படி?
மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பொருளாதார கொள்கையை கையாள்வது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு நல்ல முறையில் பொருளாதாரத்தை கையாள்கிறது என்று 48 சதவீதம் பேரும், மோசம் என 29 சதவீதம் பேரும் உள்ளனர். மேலும் கொரோனா பரவல் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் ஜனவரி 2021 முதல் பொருளாதாரம் சரிந்து வரும் நிலையில் மத்திய அரசின் செயல்பாடு எப்படி? என கேட்கப்பட்டது. இதற்கு செயல்பாடு நன்றாக உள்ளது என 67 சதவீதம் பேரும், நன்றாக இல்லை என 10 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.