ஓவர் போர்.. ஊரடங்கு நேரத்தில் இந்தக் குரங்கு என்னா பண்ணி இருக்குனு பாருங்க!
குரங்கு பட்டம் விடும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
டெல்லி: குரங்கு பட்டம் விடும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒருபக்கம் கொரோனா பதற்றம், இன்னொரு பக்கம் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதால் ஏற்படும் மனஅழுத்தம் என மனித வாழ்க்கையே இன்று பரிதாபத்துக்குரியதாக மாறி இருக்கிறது. போரடிக்குதே என செல்போன், டிவி போன்றவற்றை திறந்தால், அவர்கள் பங்குக்கு மனஅழுத்தத்தை கூட்டவே செய்கிறார்கள்.
இதில் இருந்து விடுபட வீட்டில் இருந்தபடியே எதையாவது செய்ய வேண்டிய கட்டாயம் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் இதே நிலைதான் போல.
ரோட்டில் ஆள் நடமாட்டமே இல்லாததால், மனிதர்களை பார்க்க விலங்குகளே அவர்கள் வீடு தேடி வந்து விடுகின்றன. அப்படி குரங்கு ஒன்று ஒரு வீட்டின் மொட்டை மாடிக்கு வந்து எட்டிப்பார்த்திருக்கிறது.
அப்போது அந்த வீட்டுக்காரர் செய்து வைத்திருந்த பட்டம் அதன் கண்ணில் பட்டிருக்கிறது. உடனே அதை எடுத்த குரங்கு நூலைப்பிடித்து பட்டத்தை பறக்கவிட்டு ஜாலியாக நேரத்தை கழித்திருக்கிறது.
இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "நிச்சயமாக இது குரங்கு தான். ஊரடங்கால் படிநிலை வளர்ச்சி விரைவாக நடைபெறுகிறது", என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் தற்போதைய ரைவல் கன்டெண்ட்.