என் மகனை பார்த்துக்கோங்க.. இந்திராணியிடம் சொன்ன ப. சிதம்பரம்.. ஈடி அளித்த ஷாக் ஆதாரம்!
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குறித்து இந்திராணி முகர்ஜி சொன்ன வாக்கு மூலத்தை அமலாக்கத்துறை தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குறித்து இந்திராணி முகர்ஜி சொன்ன வாக்கு மூலத்தை அமலாக்கத்துறை தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் மீதான வழக்கில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. அதே சமயம் ப. சிதம்பரத்திற்கு மேலும் சில நாட்கள் காவலை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ கோரிக்கை வைக்க உள்ளது.
என்ன முறைகேடு
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். இது மும்பையை சேர்ந்த நிறுவனம். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்துள்ளது. இதில் நிறைய பண மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில்தான் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.
என்ன வாதம்
இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை வைத்த வாதம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா முக்கியமான சில ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அமலாக்கத்துறை விசாரணையில் இந்திராணி முகர்ஜி குறிப்பிட்ட விஷயங்களை ஆதாரமாக அவர் சமர்ப்பித்தார்.
என்ன ஆதாரம்
அதன்படி, ப.சிதம்பரத்திற்கு வெளிநாடுகளில் வங்கி கணக்கு இருக்கிறது. அவர் ஐஎன்எக்ஸ் நிறுவனத்திற்கு வெளிநாடு முதலீடு வழங்குவதற்காக முறைகேடாக பணம் மற்றும் லஞ்சம் பெற்றுள்ளார். இதன் மூலம் அவரிடம் முறைகேடாக 11 அசையா சொத்துக்கள் சேர்ந்துள்ளது. அதேபோல் 17 வங்கி கணக்குகள் வெளிநாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
மிக மோசம்
இவருடைய குடும்பத்தில் சிலர் நபர்களின் பெயரில் போலியாக வெளிநாட்டில் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் போலியாக நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. அந்த நிறுவனங்களுக்கு ஐஎன்எக்ஸ் மூலம் பணம் அனுப்பப்பட்டு இருக்கிறது. சிதம்பரத்தை கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் எல்லா உண்மையும் தெரிந்துவிடும்.
என் மகன்
இந்திராணி முகர்ஜியிடம் சிதம்பரம் நேரடியாக ஒப்பந்தங்களை செய்யாமல் மகன் மூலம் செய்துள்ளார். இது தொடர்பாக இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலம் இருக்கிறது. இந்திராணி முகர்ஜியிடம் ''என் மகனை பார்த்துகோங்க'' என்று சிதம்பரம் கூறியுள்ளார். இது இந்திராணி முகர்ஜி அளித்த வாக்கு மூலத்தின் மூலம் தெரிய வருகிறது, என்று சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆதாரங்களை சமர்ப்பித்தார்.
ஆனால் என்ன
ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணையில் நீதிபதிகள் பானுமதி மற்றும் ஏ எஸ் போப்பான்னா தரப்பு இந்த வாதத்தை ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து இன்று வரை ப. சிதம்பரத்தை கைது செய்ய கூடாது என்றும் அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதன் மீதான அடுத்தகட்ட விசாரணைதான் இன்று நடக்க உள்ளது.
சொல்லும்
இன்று நடக்கும் விசாரணையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பான புதிய ஆதாரங்களை அமலாக்கத்துறை சமர்ப்பிக்கும் என்று கூறுகிறார்கள். இன்று விசாரணையில் சிபிஐ வாதங்களும் முன் வைக்கப்படும். இதனால் இன்று ப. சிதம்பரம் தரப்பு என்ன மாதிரியான எதிர் வாதங்களை வைக்க போகிறது என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.