லோக்சபா சபாநாயகரா.. அப்போ தேர்தலில் தோல்வி கேரண்டி.. 20 வருடங்களாக இந்தியாவின் டிரெண்ட் இதுதான்
Recommended Video
டெல்லி: இயல்பாகவே இப்படியா..? அல்லது சபாநாயகர்களுக்கு கிடைத்த சாபமா தெரியாது. ஆனால் கடந்த 20 வருடங்களில், எந்த ஒரு லோக்சபா சபாநாயகரும் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதாக சரித்திரமே இல்லை.
ஏதாவது ஒரு காரணம் இதன் பின்னணியில் உள்ளது. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைவது, போட்டியிட டிக்கெட்டே கிடைக்காதது, தேர்தலுக்கு முன்பாக மரணம் என்று பல்வேறு காரணங்கள்.
இதே எழுதப்படாத விதிதான், இந்த தேர்தலிலும், தொடருகிறது. 16வது லோக்சபாவின் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீண்டும் லோக்சபா தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
அகிலேஷ்-மாயா கூட்டணிக்கு அமோக ஆதரவு... பிரியங்கா தேற மாட்டாராம்... பாஜக கதி? கருத்து கணிப்பு
சுமித்ரா மகாஜன்
8 முறை லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றவர் சுமித்ரா மகாஜன். ஆனால், இத்தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. 2014ம் ஆண்டு பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்றதும், லோக்சபா சபாநாயகராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் சுமித்ரா மகாஜன். கட்சி பாரபட்சமின்றி, அனைத்து கட்சிகளிலும், செல்வாக்கும், நன்மதிப்பும் பெற்றவர், அவர். 67 வருட இந்திய நாடாளுமன்ற வரலாற்றில், காங்கிரசின் மீரா குமாருக்கு பிறகு, 2வது பெண் சபாநாயகர் என்ற பெருமையை பெற்றவர், சுமித்ரா மகாஜன்.
மீராகுமார் தோல்வி
கடந்த லோக்சபா தேர்தலில், பீகார் மாநிலம் சாசரம் தொகுதியில் போட்டியிட்ட, மீரா குமார், பாஜகவின் சீடி பாஸ்வானிடம் தோல்வியடைந்தார். அந்த தேர்தலில் பீகார் மாநிலம் வழக்கத்திற்கு மாறாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்குகளை அள்ளி வழங்கியது. இதை மீரா குமாரின் விதி என்றுதானே கூற வேண்டும். இம்முறை மீண்டும், மீரா குமார் களமிறங்கியுள்ளார் என்பது வேறு விஷயம்.
சோம்நாத்துக்கு சோதனை
மீரா குமாருக்கு முன்பாக, சோம்நாத் சட்டர்ஜி, சபாநாயகர் பதவியை அலங்கரித்தார். அப்பதவியில் அமர்ந்த, முதல் கம்யூனிஸ்ட் கட்சி எம்பியும் அவரே. ஆனால், அவருக்கு அடுத்த தேர்தலில் சோதனை மேல் சோதனை. தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அவர், அறிவித்த நிலையில், மற்றொரு பக்கம், மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்தும் அவர், நீக்கப்பட்டார். சோம்நாத் சட்டர்ஜியின் நீண்ட கால அரசியல் பயணத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
பிரபல தலைவர்
சோம்நாத் சாட்டர்ஜிக்கு முன்பாக, சபாநாயகர் பதவி வகித்தவர் மனோகர் ஜோஷி. சிவசேனா கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். பால்தாக்ரேவின் செல்லப் பிள்ளை. மகாராஷ்டிராவின் முதல்வராக பதவி வகித்தவரும்கூட. 1999ம் ஆண்டு, லோக்சபா தேர்தலில் வெற்று பெற்று, ஒரு மனதாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மனோகர் ஜோஷி. ஆனால், இவ்வளவு பிரபலமான ஒரு தலைவராக இருந்தபோதிலும், 2004ம் ஆண்டு தேர்தலில் மனோகர் ஜோஷி தோல்வியடைந்தார்.
எதிர்பாராத சம்பவம்
மனோகர் ஜோஷிக்கு முன்பாக, 1998ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம், சபாநாயகராக பதவி வகித்தவர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஜிஎம்சி.பாலயோகி. சபாநாயகர் பதவியை அலங்கரித்த முதல் தலித் தலைவர் என்ற பெருமையும், அப்பதவியில் அமர்ந்த முதலாவது மாநில கட்சியை சேர்ந்த தலைவர் என்ற பெருமையையும் பெற்றவர். ஆனால், துரதிருஷ்டவசமாக 2002ல் பாலயோகி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார்.
காரணம் இதுதான்
சுதந்திர இந்தியாவின் முதல் லோக்சபா சபாநாயகர் ஜி.எஸ்.மவலன்கர் 1952ல் அந்த பதவியை அலங்கரித்தார். ஆனால், 1956ல் மரணமடைந்தார். எனவே மீண்டும் லோக்சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்படமுடியவில்லை. இப்படியாக ஏதோ ஒரு வகையில், சபாநாயகர் பதவிக்கும், தேர்தல் தோல்விக்கும் ஒரு தொடர்பு இருந்து கொண்டே உள்ளது. இதற்கு முக்கிய காரணம், சபாநாயகர்கள் கட்சி சார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற விதிமுறைதான். இதன் காரணமாக, அவர்களால் கட்சி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட முடிவதில்லை. எனவே, தேர்தலில் வெற்றி பெறுவது கஷ்டமான விஷயமாகிவிடுகிறது. மற்றபடி, மூட நம்பிக்கையில் நம்பிக்கை வைக்க வேண்டாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.