ஹேப்பி நியூஸ்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு பம்பர் பரிசு.. மத்திய அரசு அதிரடி முடிவு?
டெல்லி: பொருளாதாரம் ஆட்டம் கண்டு வரும் நிலையில், நடுத்தர வர்க்கம் மற்றும் மாத சம்பள வருவாய்ப் பிரிவினரின் நீண்டகால கோரிக்கை ஒன்று தற்போது மத்திய அரசால் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்திய பொருளாதாரம் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது. கார்கள் தயாரிப்பு நிறுவனங்கள் முதல் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தடுமாறி வருகின்றனர்.
இந்த நிலைமையை சரி செய்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து, பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகளுக்கு மாறாக அல்லது அவற்றை திருத்தும் வகையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
உற்பத்தி அதிகரிப்பு
இதன் ஒரு பகுதியாக மிகப்பெரும் நடவடிக்கையாக, கார்பொரேட் வரிவிதிப்பு பெருமளவுக்கு குறைக்கப்பட்டன. இதன் மூலமாக முதலீடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலீடுகளை ஊக்கப் படுத்துவதற்கு என்னதான் திட்டங்கள் வகுக்கப்பட்டபோதிலும், பொருட்களை வாங்குவதற்கு நுகர்வோர் கையில் பணப்புழக்கம் இல்லை என்று ஒரு தரப்பு பொருளாதார வல்லுனர்கள் தொடர்ந்து தெரிவித்தபடி உள்ளனர். மக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு இதுவரை எடுக்கவில்லை என்பது அவர்கள் ஆதங்கம்.
முக்கிய முடிவு
இந்த நிலையில்தான் தனிநபர் வருமான வரி விகிதங்களை அதிரடியாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக நடுத்தர வர்க்கத்தினர் கையில் பணப்புழக்கத்தை அதிகரித்து அவர்கள் நுகர்வை அதிகரிக்க இது வழிவகுக்கும் என்று மத்திய அரசு நினைக்கிறது.
வரி விகிதங்கள்
தற்போது ஆண்டு வருமானம் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் ஈட்டக்கூடிய தனிநபர்களுக்கு, 20% வருமான வரி விதிக்கப்படுகிறது. இதை 10% ஆக குறைக்கலாமே, என்பது மத்திய அரசிடம் உள்ள ஒரு திட்டமாகும். தற்போது 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோர் 5 சதவீத வருமான வரி கட்ட வேண்டும். போலவே 10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோர் 30% வருமான வரி செலுத்த வேண்டியுள்ளது. ஆண்டுக்கு அதிகபட்சமாக 2.5 லட்சம் வருவாய் ஈட்டுவோர் மட்டுமே வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
மக்கள் கையில் பணம் தேவை
இன்றைய காலகட்டத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் வரை வருமானம் பெறுவோரை, நடுத்தர வர்க்கத்தினர் என்றுதான் கருதப்பட முடியும். ஏனெனில், விலைவாசி அந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு விஷயங்களுக்கும் அதிகம் செலவிட தேவையுள்ளது. இதில் வருமான வரி என்ற பெயரில் 20 சதவீதம் வரை பிடித்துக் கொள்ளும்போது, அது நடுத்தர மக்களின் அத்தியாவசிய அல்லது பிற தேவைகளை குறைத்துக் கொள்ள வழி வகுத்து விடுகிறது. இதனால் சந்தையில் பொருட்கள், வாங்க ஆளின்றி கேட்பாரற்றுக் கிடக்கின்றன. இது உற்பத்தியை பாதித்து தொழிலாளர்களுக்கான வருவாயை குறைத்து அதன் மூலம் நாட்டில் பணப்புழக்கத்தை மேலும் குறைக்கிறது. இதையெல்லாம் ஒப்பிட்டு பார்த்தால் மாத சம்பளம் பெறுவோரிடமிருந்து பெறக்கூடிய வருமான வரியின் அளவு என்பது மிக குறைவு தான். எனவே, இதை தியாகம் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.