வெங்காயம் கருத்தால் சர்ச்சையில் நிர்மலா சீதாராமன்.. 'திறமையற்றவர்' என ராகுல் கடும் தாக்கு
டெல்லி: நாட்டில் என்ன நடக்கிறது என்பதே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தெரியவில்லை. அவர் அடிப்படையிலேயே திறமையற்றவர் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
வெங்காய விலை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி ஒருவர் "நீங்களும் வெங்காயம் சாப்பிடுவீர்கள்தானே, உங்களுக்கும் அதன் பாதிப்பு தெரியுமல்லவா, உங்களையும்கூட அது பாதிக்குமல்லவா?" என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நான் அந்த அளவுக்கு நிறைய பூண்டு, வெங்காயத்தை சாப்பிட மாட்டேன். . எனவே, கவலைப்பட வேண்டாம். வெங்காயத்தை சாப்பிடாத குடும்பத்திலிருந்து வந்தவள் நான் என்றார். வெங்காய விலையால் நாட்டு மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில் நிர்மலாவின் இந்த கருத்து எதிர்க்கட்சியினரை கடும் கோபத்தில் ஆழ்த்தியது.
இதனிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் இது பற்றி கூறுகையில், "நாட்டில் என்ன நடக்கிறது என்பதே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தெரியவில்லை. அவர் அடிப்படையிலேயே திறமையற்றவர்.
வெங்காய விலை உயர்வை பற்றி கேட்டால் நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை, பூண்டு சாப்பிடுவதிலலை என்கிறார் நிதியமைச்சர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நாட்டின் நிதிபொறப்பை திறமைசாலிகள் கையாண்டனர்" என நிர்மலாவை கடுமையாக ராகுல் விமர்சித்தார்.