தேங்கி கொண்டே போகும் வழக்குகள்.. நீதிபதிகளின் எண்ணிக்கயை அதிகரிக்க ரஞ்சன் கோகோய் வலியுறுத்தல்
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, இந்திய தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகோய் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகோய் எழுதியுள்ள கடிதத்தில், நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை 65 ஆக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து தீர்க்க முறையே அரசியலமைப்பின் 128 மற்றும் 224 ஏ பிரிவுகளின் கீழ், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கலாம் என்றும் கோகோய் பிரதமருக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
ஒரு நீதிபதி முழுமையாக பரிணாமிக்க நேரம் எடுக்கும், அவர் தனது உயர்ந்த அனுபவத்தின் புதுமையான தீர்வுகளை கண்டறியும் நேரத்தில் அவர் ஓய்வு வயதை நெருங்கி விடுவதாக ரஞ்சன் கோகோய் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், உச்சநீதிமன்றத்திற்குரிய நீதிபதிகளின் முழு எண்ணிக்கையான 31 என்ற எண்ணிக்கையே பல ஆண்டுகளுக்கு பின்னர் சமீபத்தில் தான் எட்டப்பட்டது. தற்போது உச்சநீதிமன்றத்தில் 58,660 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தலைமை நீதிபதி, இந்த எண்ணிக்கை தொடர்ந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருவதால் அதிகரித்து கொண்டே செல்வதாக கவலை தெரிவித்துள்ளார்.
இதில் 25 ஆண்டுகளுக்கு மேலாக 26 வழக்குகளும், 20 ஆண்டுகளுக்கு மேலாக 100 வழக்குகளும், 15 ஆண்டுகளுக்கு மேலாக 593 வழக்குகளும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக 4,977 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன் 1988-ம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை18-லிருந்து 26 ஆக உயர்த்தப்பட்டது.
பின்னர் 2009-ல் தலைமை நீதிபதி உட்பட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது வழக்குகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக்கொண்டே செல்வதால், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து உடனடியாக பரிசீலிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் நாடு முழுவதுமுள்ள 24 உயர்நீதிமன்றங்களில் சுமார் 43 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களில் சுமார் 35 சதவீதம் அதாவது 377 இடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.
அதே போல ஓய்வுபெற்ற நீதிபதிகள் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்படும்போது 62 வயது தாண்டியவர்களும் 65 வயது வரை பணிபுரியலாம் என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ரஞ்சன் கோகாய் குறிப்பிட்டுள்ளார்.