முப்படைக்கும் இனி ஒரே தலைவர்.. மத்திய அரசு அதிரடி முடிவு.. பிரதமர் மோடி மாஸ் அறிவிப்பு!
இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு இனி முப்படைக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு இனி முப்படைக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் அடைந்தது. இதையடுத்து இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார். அதன்பின் செங்கோட்டையில் பேசிய மோடி பல்வேறு விஷயங்கள் குறித்து குறிப்பிட்டார்.
என்ன தீவிரவாதம்
பிரதமர் மோடி தனது பேச்சில், தீவிரவாதத்திற்கு எதிராக நாம் கடுமையாக செயல்பட்டு வருகிறோம். நாட்டின் பாதுகாப்பு தற்போது முக்கிய பிரச்சனையாகி உள்ளது. தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்த நாடுகளை நாம் அம்பலப்படுத்தி உள்ளோம். உலக நாடுகள் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவின் பக்கம் நிற்கிறது.
ஆதரவு
தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தீவிரவாதத்திற்கு எதிராக நாம் இனியும் அமைதியாக இருக்க முடியாது. வங்கதேசம், சீனா , ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் கூட தீவிரவாத தாக்குதல் நடந்தது. நாம் அதை எல்லாம் கண்டித்து இருக்கிறோம்.
முப்படை தளபதி
முப்படைக்கும் இனி ஒரே தலைவர் இருப்பார். தரைப்படை, விமானப்படை, கடற்படை மூன்றுக்கும் இனி ஒரே தலைமை இருக்கும். இதற்கு முன் முப்படைகளுக்கு தனி தனி தலைவர்கள் இருந்தனர் . இனி அது போல இருக்காது.
எப்படி
முப்படைக்கு ஒரே தலைமை பாதுகாப்பு அதிகாரி நியமனம் செய்யப்படுவார். இந்த கோரிக்கை பல நாட்களாக வைக்கப்பட்டு வந்தது. இப்போது நாம் அதை நிறைவேற்றி இருக்கிறோம். இதனால் நமது பாதுகாப்பு இன்னும் பலமடையும் என்றுள்ளார்.