ஆப்கன் விவகாரம்.. ரஷ்யா நடத்தும் கூட்டத்திற்கு இந்தியாவுக்கு அழைப்பு இல்லை.. ஆனால் பாக்-க்கு அழைப்பு
டெல்லி: ஆப்கன் விவகாரத்தில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு அதிகரித்துள்ள நிலையில், ஆப்கன் விவகாரம் தொடர்பாக நடைபெறும் "extended troika" ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
Recommended Video
ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியே தொடங்கியது முதலே அங்கு அமைதியில்லாத சூழலே நிலவி வருகிறது. ஆப்கன் அரசுப் படைகள் மீது தாலிபான்கள் தங்கள் தாக்குதல்களைத் தொடங்கிவிட்டனர்.
பல்வேறு இடங்களிலும் தாலிபான்களும் அரசு படைகளுக்கும் இடையே கடுமையான சண்டை நிலவி வருகிறது. பல வாரங்களாக உள்நாட்டுப் போர் தொடர்வதால் அங்கு அமைதி இல்லாத சூழலே காணப்படுகிறது. இந்நிலையில், ஆப்கனில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த பல்வேறு தரப்பினரும் தொடர் முயற்சி எடுத்து வருகின்றன.
ராகுலின் பிரேக் ஃபாஸ்ட் மீட்டிங்கும்.. ஒன்று திரளும் எதிர்க்கட்சிகளும்.. திகுதிகு டெல்லி
இந்தியாவுக்கு அழைப்பு இல்லை
குறிப்பாக, ரஷ்யா இதில் அதிக ஈடுபாடு காட்டுகிறது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி கத்தார் நாட்டில் ஆப்கன் விவகாரம் தொடர்பாக "extended troika" என்ற ஆலோசனைக் கூட்டத்தை ரஷ்யா முன்னெடுத்துள்ளது. இதில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த சிறப்புத் தூதர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கத்தார் நாட்டில் ஆப்கானிஸ்தான் உள்ளூர் அமைப்புகள், சர்வதேச அமைப்புகள் கலந்துகொள்ளும் மற்றொரு கூட்டமும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்திற்குப் பாகிஸ்தான் அழைக்கப்பட்டுள்ள போதிலும், இந்தியா புறக்கணிக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
கருத்து வேறுபாடு
ஆப்கன் விவகாரத்தில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆப்கனில் தற்போதுள்ள அஷ்ரப் கனி அரசை இந்தியா ஆதரிக்கிறது. ஆனால் அஷ்ரப் கனி அரசு தொடரக் கூடாது என நினைக்கும் ரஷ்யா, இடைக்கால அரசு அமைக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தச் சூழலில் தான் தற்போது நடைபெறும் ஆலோசனையில் பாகிஸ்தான் சேர்க்கப்பட்டுள்ள நிலையிலும்கூட இந்தியா புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ரஷ்யா முடிவு ஏன்
இருப்பினும், ஆலோசனைக் கூட்டத்தில் நடைபெறும் விவகாரங்கள் குறித்து இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "அஷ்ரப் கனி அரசை அமெரிக்காவின் பிரதிநிதியாகவே ரஷ்யா பார்க்கிறது. இதனால் தான் தாலிபான் தலைமையில் ஆட்சி அமைக்க ரஷ்யா ஆதரவு அளிக்கிறது. மேலும் தாலிபான்கள் தலைமையில் அமையும் ஆட்சி ஐஎஸ் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்தும் என ரஷ்யா நம்புகிறது. இதனால்தான் பாகிஸ்தான் நாட்டுடனும் இணைந்து செயல்பட ரஷ்யா முன்வந்துள்ளது" என்றார்.
இந்தியா அதிருப்தி
இந்த கூட்டத்தில் இந்தியா சேர்க்கப்படாதது குறித்து ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்யாவின் சிறப்புத் தூதர் ஜமீர் கபுலோ, "ஆப்கானிஸ்தானின் மோதலுக்குப் பிந்தைய வளர்ச்சியில் மட்டுமே இந்தியாவின் பங்கு இருப்பதாக ரஷ்யா பார்க்கிறது. ஏனெனில் இதுவரை இந்தியா தாலிபான்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இதனால்தான் கூட்டத்தில் இந்தியாவை அழைக்கவில்லை" எனத் தெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு அதிருப்தி தெரிவித்த இந்திய அதிகாரி ஒருவர், இரு நாடுகளுக்கும் இடையே முறையான தகவல் தொடர்பு இல்லாததையே இது காட்டுகிறது. ஏனென்றால் கடந்த சில மாதங்களில் தாலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என அவர் தெரிவித்தார்.