இந்தியா- சீனா இடையேயான 9-வது சுற்றுப் பேச்சு- எல்லைகளில் படைகளை விரைவாக விலக்க இருதரப்பும் ஒப்புதல்!
டெல்லி: இந்தியா- சீனா ராணுவ தளபதிகளிடையேயான 9-வது சுற்று பேச்சுவார்த்தையில் எல்லைகளில் படைகளை விரைவாக விலக்கிக் கொள்வது தொடர்பாக இருதரப்பிலும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லடாக் ஊடுருவல் விவகாரத்தை தொடர்ந்து இந்தியா- சீனா இடையே ராணுவம், வெளியுறவு நிலையில் இதுவரை 8 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த ஒரு இணக்கமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் இருநாடுகளின் ராணுவ தளபதிகளிடையே 9-வது சுற்று பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மோல்டோ-சுஷுல் எல்லையோர சந்திப்பு மையத்தின் சீன பகுதியில் இந்திய-சீன ராணுவங்களின் தளபதிகள் அளவிலான ஒன்பதாவது கூட்டம் ஜன.24-ல் நடைபெற்றது. எல்லைப்பகுதியில் இருந்து படைகளை திரும்ப பெறுவது குறித்த ஆழமான கருத்து பரிமாற்றங்களை இரு தரப்பும் மேற்கொண்டன.
இச்சந்திப்பில் நடந்த கருத்து பரிமாற்றங்கள் நேர்மறையாகவும், செயல்படுத்தக்கூடியவையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருந்ததாகவும், பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதலை மேலும் மேம்படுத்தியதாகவும் இரு தரப்பினரும் ஒத்துக்கொண்டனர். படைகளை விரைவாக விலக்கிக் கொள்ள இருதரப்பும் ஒத்துக்கொண்டனர்.
ஒருபுறம் பேச்சுவார்த்தை,மறுபுறம் அத்துமீறல்..எல்லை தாண்டிய சீன வீரர்கள்.. விரட்டியடித்த கிராமவாசிகள்
இரு நாட்டு தலைவர்களுக்கிடையேயான புரிதலையும், பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தையும் பேணிகாக்க உறுதியேற்றுக்கொண்ட தளபதிகள், 10-ஆம் கட்ட பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த முடிவெடுத்தனர். முன்கள வீரர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்தவும், எல்லையோர நிலைமையை நிலைப்படுத்தவும், அமைதியை பேணிக் காக்கவும் இரு தரப்பும் ஒத்துக்கொண்டனர்.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.