எல்லையில் முடிவுக்கு வருமா மோதல்.. ஜெய்சங்கர்-வாங் யீ பேச்சுவார்த்தை.. பலனளித்ததாக சீனா வரவேற்பு
டெல்லி: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்து எல்லைப் பிரச்சினை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி தலைமையில் இந்திய உயர்மட்டக்குழு ஒன்றும் கலந்து கொள்கிறது.
ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ஷாங்காயை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2001-ம் ஆண்டு அமைப்பை நிறுவின.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பில் 2005ம் ஆண்டு முதல் இந்தியா பார்வையாளராக இருந்து வந்தது. பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்தியாவும், பாகிஸ்தானும் நிரந்தர உறுப்பு நாடுகளாகி விட்டன.
வீடியோ காலில் பேசுகிறோம்.. சரண்டராக ரெடியான 4 பேர் டீம்.. கோடநாடு வழக்கில் திருப்பம்.. பின்னணி
உச்சி மாநாடு
இந்த அமைப்பின் உறுப்பு நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு இன்று தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் நடக்கிறது. மாநாட்டை தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான் தலைமை தாங்கி நடத்துகிறார். நேரடியாகவும், காணொலி முறையிலும் நடக்கும் இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகளின் தலைவர்கள், துர்க்மெனிஸ்தான் அதிபர் மற்றும் சிறப்பு விருந்தினர் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
ஜெய் சங்கர்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள, தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேவுக்குச் சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ உடனான சந்திப்பின்போது, இந்தியா மற்றும் சீன எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை முழுமையாக திரும்ப பெறுவது குறித்து விவாதித்தோம். இந்தியா - சீனா இடையேயான உறவு மேம்பட வேண்டுமானால், எல்லையில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த வேண்டியது முக்கியம். இதற்காக, எல்லையில் இருந்து படைகளை திரும்ப பெறுவதை துரிதப்படுத்த வேண்டும் என்று, சீன தரப்பிடம் வலியுறுத்திக் கூறினேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சீனா கருத்து
பெய்ஜிங்கில் உள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில், சீனா-இந்திய வெளியுறவு அமைச்சகங்கள் மற்றும் இரு தரப்பு ராணுவத்தினருக்கும் இடையே உள்ள பேச்சுவார்த்தைகள், எல்லைப் பிரச்சனையை எதிர்கொள்வதில், பயனுள்ள மற்றும் சரியான திசையில் நகர்கிறது. இந்தியா அதே திசையில் நகரும் என்று சீனா நம்புகிறது. படிப்படியாக வழக்கமான மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டை நோக்கி நகரும் நம்பிக்கையுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் நேரில் பங்கேற்பதற்காக ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜெய் லவ்ரோவ், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி ஆகியோரும் துஷான்பே செல்வார்கள் என தெரிகிறது.
இந்தியா-சீனா மோதல்
கிழக்கு லடாக் உட்பட இந்திய-சீன எல்லைப் பகுதிகள் பலவற்றில் சீனா அத்துமீறி ஆக்கிரமிக்க முயல்வதால் அங்கு இந்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 17 மாதங்களாக இந்த உரசல் நிலை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய உரசல் நிலைமையை தீர்க்க இந்திய மற்றும் சீன அதிகாரிகள் 13வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தையை நடத்த உள்ளனர், கிழக்கு லடாக் எல்லையில் சீனா தனது படைகளை குவித்து பல பகுதிகளுக்குள் நுழைந்து கல்வான் மோதல்களுக்கு வழிவகுத்தது. இதில் 20 இந்திய வீரர்கள், மற்றும் 4 சீன வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பிரதமரின் திட்டம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில், வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார். அடுத்த வாரம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் தலைவர்களுடன் குவாட் உச்சிமாநாட்டில் மோடி பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.