சீனா ஆதரவு ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் மீண்டும் இலங்கை- என்னவாகும் இந்தியாவுடனான உறவு?
டெல்லி: சீனா ஆதரவாளர்களான ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் இலங்கை மீண்டும் சிக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்தியாவுடனான இலங்கையின் உறவு எத்தகையதாக இருக்கப் போகிறது என்பது அரசியல் வல்லுநர்களின் கேள்வி.
இந்திரா காந்தி காலம் வரைக்கும் இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளின் பிடி இந்தியாவின் கைகளில்தான் இருந்தது. அமெரிக்கா உள்ளிட்ட எந்த ஒரு நாடும் இலங்கைத் தீவில் கால்பதிக்க இந்தியா அனுமதித்தது இல்லை.
இந்திரா காந்தி காலம் வரை வெளியுறவுக் கொள்கைகளை அரசியல் தலைவர்கள் தீர்மானித்தனர்; குறிப்பாக பிரதமர்தான் தீர்மானிக்கும் நிலையில் இருந்தார். ஆனால் ராஜீவ் காந்தி காலத்தில் வெளியுறவுக் கொள்கையை அதிலும் குறிப்பாக இலங்கை விவகாரம் அதிகாரிகள் கைக்கு போனது.
இன்னும் 1 வருடம்.. தம்பிக்கு அதிபர் பதவி.. அண்ணனுக்கு பிரதமர் பதவி.. மீண்டும் வரும் மஹிந்த ராஜபக்சே
வெளியுறவுக் கொள்கை
அன்று தொடங்கிய வெளியுறவுக் கொள்கையின் சறுக்கல் இன்று வரை நீடிக்கிறது. இதனால் இலங்கை, மாலத்தீவு. நேபாளம் உள்ளிட்ட பல அண்டை நாடுகளின் மீதான பிடியை இந்தியா பறிகொடுத்தது.
புலிகளுக்கு எதிராக உதவி
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு உதவியதன் மூலம் அந்நாட்டை தம் பக்கமும் தக்க வைக்க முயற்சிகளை இந்தியா மேற்கொண்டது. அதேநேரத்தில் இலங்கையில் பெருமளவு தொழில் முதலீடுகளை கொட்டி சீனாவும் வேரூன்றி நின்றது. குறிப்பாக மகிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் சீனாவுக்கு சிவப்புக் கம்பளம் தென்னிலங்கை முழுவதும் விரிக்கப்பட்டது.
சீனாவின் ஆதிக்கம்
இதனால் தென்னிலங்கையான சிங்களப் பகுதியில் சீனாவின் கை ஓங்கியது. ஒருகட்டத்தில் தமிழர் பகுதியான வடக்கை நோக்கியும் சீனாவின் பார்வை திரும்பியபோதுதான் சற்றே உஷாரானது. இந்தியா வடக்கிலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகம் உள்ள கிழக்கிலும் சீனாவின் கால்கள் பதிக்காதபடி இந்தியா விழிப்புடன் இருந்து வருகிறது.
விரட்டிய இந்தியா
சீனாவுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தவர் மகிந்த ராஜபக்சே என்ற ஒரே காரணத்துக்காகவே 2015 அதிபர் தேர்தலில் இந்தியா தலையிட்டது. மைத்திரிபால சிறிசேனா பக்கம் இந்தியா நின்றது. இதனால் தோல்வியைத் தழுவிய மகிந்த ராஜபக்சே பலமுறை இந்தியாதான் தமது தோல்விக்குக் காரணம் என கூறியிருக்கிறார்.
தமிழர்கள் நிராகரிப்பு
இந்நிலையில் தற்போதைய அதிபர் தேர்தலை இந்தியா மிகவும் மவுனமாகவே பார்த்து வந்தது. சீனா ஆதரவு குடும்பமான ராஜபக்சே குடும்பம் களத்துக்கு மீண்டும் வந்தது. இந்தியாவை எதிர்த்து விடுதலைப் புலிகளுடன் கை கோர்த்த பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாசவும் களத்தில் நின்றார். இத்தேர்தலைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களாகிய தமிழர்களும், முஸ்லிம்களும் கோத்தபாய ராஜபக்சேவை முற்றாக நிராகரித்துவிட்டனர்.
கோத்தபாயவுக்கு எதிர்ப்பு
இதை சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவாக நாம் பார்க்கக் கூடாது; கோத்தபாயவை ஏற்கவே மாட்டோம் என்கிற நிலைப்பாட்டின் வெளிப்பாடக பார்க்க வேண்டும் என்பதே மூத்த தமிழ் பத்திரிகையாளர்களின் கருத்து. இதனை இன்றைய பதவி ஏற்பு விழாவின் போதும் கோத்தபாய வெளிப்படையாகவே ஒப்பும் கொண்டிருக்கிறார்.
கொடூரமானவர் கோத்தபாய
வெள்ளைக்கொடியுடன் சென்ற புலிகளின் தளபதிகளையும் பிஞ்சு பிள்ளை பாலச்சந்திரனையும் சுட்டுப் படுகொலை செய்ய உத்தரவிட்ட கோத்தபாயவை கொடூரமானவராகவே உலகத் தமிழ் சமூகம் பார்த்து வருகிறது. இந்தியாவுக்கும் ஈழத் தமிழருக்கும் எதிரானவர் கோத்தபாய ராஜபக்சே.
இந்தியாவை மிரட்டும் இலங்கை?
ஈழத் தமிழர்களும் தாங்கள் கோத்தபாய ராஜபக்சேவை ஏற்க முடியாது என்பதை தேர்தல் மூலம் சர்வதேசத்துக்கு தெளிவுபடுத்திவிட்டனர். இந்தியப் பெருங்கடலிலும் வங்கக் கடலிலும் சீனாவுக்கான வாசல்களை கோத்தபாய அண்ட் கோ திறந்து விட்டு இந்தியாவை மிரட்டிப் பார்க்க துணியும் என்பதுதான் அவர்களது கடந்த கால வரலாறு.
தமிழர் பிரச்சனைக்கு தீர்வு
இத்தனை ஆண்டு காலம் ஈழத் தமிழர்களது வளர்ச்சி மேம்பாட்டில் மேம்போக்கான அக்கறையை காட்டி வந்த இந்திய அரசு நிலை மாற வேண்டிய தருணமிது. இப்போதாவது ஆக்கப்பூர்வமான ஈழத் தமிழருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அரசியல் தீர்வை பெற்றுத் தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது நமது தேசம். ஏனெனில் ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் தலையீடு எந்தளவு காத்திரமாக இருக்கும் போது அந்த அளவு இலங்கையின் பிடியும் நம் வசம் இருக்கும் என்பதுதான் கள யதார்த்தம் என சுட்டிக்கட்டுகின்றனர் தெற்காசிய அரசியல் வல்லுநர்கள்.