இனி பேச வேண்டியது ஒன்னுதான்.. காஷ்மீர் குறித்து பேசிய ஐநா பொதுச்செயலாளருக்கு இந்தியா பதிலடி
டெல்லி: இருநாடுகளும் ஒப்புக்கொண்டால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருக்கிறேன் பாகிஸ்தானில் போய் ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இந்தியாவும் சரியான பதிலடி கொடுத்துள்ளது.
ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ், பாகிஸ்தானுக்கு நான்குநாள் சுற்றுப்பயணமாக ஞாயிற்றுக்கிழமை வந்தார்.. ஆப்கானிஸ்தான் அகதிகள் குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்கிறார் .அத்துடன் சிக்கியர்களை புனித தலங்களில் ஒன்றான குருத்வாரா கர்த்தார்பூர் சாஹிப்பைப் பார்வையிடுவார்.
இந்நிலையில் ஞாயிறு அன்று இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரோஷியை அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பேசியதாக கூறப்படுகிறது.
காஷ்மீர் விஷயத்தில்
இந்தச் சந்திப்புக்குப் பின்பு செய்தியாளர்ளிடம் ஐநா பொதுச்செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ் பேசுகையில் ``பேச்சுவார்த்தை ஒன்றுதான் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்த இருக்கும் சிறந்த வழி. இந்த வழியைத்தான் ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சிலும் விரும்புகிறது. ஆரம்பம் முதலே காஷ்மீர் விவகாரத்தில் எனது எண்ணத்தை வெளிப்படுத்தி வந்திருக்கிறேன். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டால் காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருக்கிறேன். இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவ வேண்டும். மனித உரிமைகளை இரு நாடுகளும் மதிக்க வேண்டும் " இவ்வாறு தெரிவித்தார்.
காஷ்மீர் இந்தியா
ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸின் இந்த பேச்சால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்துள்ளது. அவருக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் பதிலடி கொடுத்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ராவேஷ் குமார் இதுபற்றி பேசுகையில் ``காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்றும் மாறாது. காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதி. இனியும் அப்படித்தான் இருக்கும்.
மத்தியஸ்தம் தேவையில்லை
காஷ்மீர் விவகாரத்தில் இனி பேசவேண்டியதெல்லாம் ஒரே விஷயம் தான். அது அங்கு ஆக்கிரமிப்பு செய்துள்ள பாகிஸ்தான் மற்றும் சட்ட விரோதமாகக் குடியேறியுள்ள தீவிரவாதிகள் வெளியேற்றுவது குறித்து தான் பேச வேண்டும். இதை தவிரி இரு நாடுகளுக்கு இடையே வேறு எதாவது சிக்கல் இருந்தால், அதை நாங்களே பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து கொள்கிறோம். இதில் மூன்றாவது நபரின் தலையீடு அவசியமில்லை. இது தான் இந்தியாவின் கருத்து. இந்தியாவின் இந்த கருத்தில் மாற்றமில்லை" இவ்வாறு கூறினார்.
இந்தியா அதிருப்தி
காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சவார்த்தை நடத்த தயார் என அவ்வப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசுவதும் அதை இந்தியா வேண்டாம் என மறுப்புதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த சூழலில் ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்சும் இப்போது மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக தெரிவித்து இருப்பது இந்தியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக துருக்கி, மலேசியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. அமெரிக்கா இந்த விஷயத்தில் தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு வருகிறது.