வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை- நேபாளத்தில் கிடுகிடு விலை உயர்வு- சிங்கப்பூரில் தட்டுப்பாடு அபாயம்
டெல்லி: வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதால் நேபாளத்தில் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சிங்கப்பூரில் இந்திய வெங்காயத்துக்கு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வெங்காய ஏற்றுமதி அதிகரித்திருந்தது. ஆனால் அண்மையில் பெய்த கனமழை உள்ளிட்டவைகளால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாராகிறது ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து.. தனியார் மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம்
வெங்காய ஏற்றுமதிக்கு தடை
இதனால் உள்நாட்டில் வெங்காய பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனையடுத்து வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. கொரோனா லாக்டவுன் காலத்தில் வெங்காய விலை மிக உச்சத்தைத் தொட்ட அனுபவத்தையும் இந்தியா எதிர்கொண்டது.
விலை குறையலாம் என நம்பிக்கை
தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் 1 கிலோ விலை ரூ50; சின்ன வெங்காயத்தின் 1 கிலோ விலை ரூ100 என விற்கப்படுகிறது. வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் உள்நாட்டு சந்தையில் வெங்காய வரத்து தடையின்றி கிடைக்கலாம். இதனால் வெங்காய விலை சற்று குறையக் கூடும்.
நேபாளத்தில் விலை உயர்வு
இதனிடையே இந்திய வெங்காயத்தை நம்பி இருந்த வெளிநாடுகளில் வெங்காயத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது. சில நாடுகளில் வெங்காயத்துக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் வெங்காயத்தின் விலை கிலோ 1-க்கு ரூ15 வரை கூடுதலாக விற்கப்படுகிறது. இது இனிவரும் நாட்களில் மேலும் பல மடங்கும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வெயிட்டிங்.. இந்திய வெங்காயம்
சிங்கப்பூரில் உணவகங்களில் இந்திய வெங்காயங்களே பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய மத்திய அரசு தடையால் இந்திய வெங்காயத்துக்கு தட்டுப்பாடு உருவாக உள்ளது. இதனை சமாளிக்க பிற நாடுகளில் இருந்தும் சிங்கப்பூர் இறக்குமதி செய்யலாம். ஆனால் இந்திய வெங்காயங்களையே சிங்கப்பூர் நாட்டவர் பயன்படுத்த விரும்புகின்றனர். இதனால் இந்திய வெங்காயங்களுக்கு எதிர்பார்ப்புடன் காத்திருக்கவும் தயாராக உள்ளனராம்.