ஒருபுறம் உயரும் மின்தேவை.. மறுபுறம் வேகமாக காலியாகும் நிலக்கரி.. நாட்டில் என்னதான் நடக்கிறது?
டெல்லி: இந்தியாவில் அனல் மின்நிலையம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு இந்த மாதம் 3.2% அதிகரித்துள்ளது. அதேபோல சோலர் மின் உற்பத்தி 30% வரை அதிகரித்துள்ளது. இருந்தாலும் கூட நாட்டின் மின் தேவை எதிர்பார்த்ததைக் காட்டிலும் பல மடங்கு அதிகரித்துள்ளதால் பல இடங்களிலும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதனால் உலக நாடுகளில் மின் தேவை கணிசமாகக் குறைந்திருந்தது. அதேநேரம் வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டதில் இருந்து உலகம் வெகு சீக்கிரம் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது.
விஸ்வரூபம் எடுக்கும் நிலக்கரி பற்றாக்குறை.. இருளில் மூழ்கும் இந்தியா? மத்திய அரசின் திட்டம்தான் என்ன
மின் தேவை
இவ்வளவு விரைவாக நாம் கொரோனாவில் இருந்து மீண்டு வருவோம் என யாரும் எதிர்பார்க்கவில்லை. முன்பு, இயல்புநிலை திரும்பக் குறைந்தபட்சம் சில ஆண்டுகள் வரை ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பைக் காட்டிலும் விரைவாக கொரோனா கட்டுக்குள் வந்ததால், மின் தேவை எதிர்பார்த்ததைவிடப் பல மடங்கு அதிகரித்தது. உலகின் பல்வேறு நாடுகளிலும் நிலக்கரியைப் பயன்படுத்தி அனல் மின்நிலையங்கள் மூலமே மின் உற்பத்தி அதிகம் செய்யப்படுகிறது.
நிலக்கரி விலை
தேவை அதிகரித்ததால் நிலக்கரி விலை ஏற தொடங்கியது. இது தவிர நிலக்கரி சுரங்கங்கள் அருகே பெய்த மழையும் நிலக்கரி வெட்டி எடுப்பதைச் சிக்கல் ஆக்கியது. இதனால் சர்வதேச அளவில் நிலக்கரியின் விலை கிடுகிடுவென அதிகரித்து. இதன் காரணமாக மின் உற்பத்திக்கு நிலக்கரியைப் பெரிதும் நம்பியிருந்த பல்வேறு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சீனா உட்பட சில நாடுகளில் ஏற்கனவே மின்வெட்டு பிரச்சினை தொடங்கிவிட்டது.
மின்வெட்டு சிக்கல்
இந்த நிலை தற்போது இந்தியாவிலும் மெல்ல எட்டிப்பார்க்கத் தொடங்கியுள்ளது. ஏனென்றால் நமது நாட்டிலும் சுமார் 65% மின் உற்பத்தி அனல் மின் நிலையங்களிலிருந்தே நமக்குக் கிடைக்கிறது. நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கும் சூழலில் உருவாகியுள்ளன. நாட்டின் வட மாநிலங்களான பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் சில பகுதிகளில் 12 முதல் 14 மணி நேரம் வரை மின்வெட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், நிலக்கரி சிக்கலைச் சமாளித்து, மின்வெட்டு பிரச்சினை தேசத்தின் பிரச்சினையாக மாறாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு ஏற்கனவே எடுக்கத் தொடங்கிவிட்டது.
உற்பத்தி அதிகரிப்பு
சொல்லப்போனால் இந்த அக்டோபர் மாதம் நிலக்கரி உற்பத்தி அதிகரித்துள்ளது. கோல் இந்தியா நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக நிலக்கரியை இந்த மாதம் தான் வெட்டி எடுத்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் 70% அனல் மின்நிலையங்களில் இருந்தே நமக்கு இப்போது கிடைக்கிறது. இது வழக்கமாகக் கிடைப்பதைவிட 4 -5% வரை அதிகமாகும். அதேபோல சோலர் மின் உற்பத்தியும் வழக்கத்தைவிட 30% அதிகரித்துள்ளது. இப்படி அனைத்து முறைகளிலும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அதிகரித்தே வந்துள்ளது.
கையிருப்பு நிலை
இருந்தாலும் கூட, கொரோனாவுக்கு பின், நாட்டின் மின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளதால் நிலைமை சிக்கலாகியுள்ளது. நாட்டின் மின் உற்பத்தி தேவையைக் காட்டிலும் சுமார் 1.4% வரை குறைவாகவே உள்ளது. இது அதிகரித்தால் பெரும் சிக்கல் உருவாகும் இதைத் தடுக்கவே மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சராசரியாக நாட்டில் உள்ள அனல் மின்நிலையங்களில் வெறும் 3 அல்லது 4 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது. 2 மாதங்களுக்கு முன் நாட்டின் அனைத்து அனல் மின் நிலையங்களும் சுமார் 12 நாட்களுக்குத் தேவையான நிலக்கரியைக் கையிருப்பாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு நடவடிக்கை
முன்னதாக கடந்த மாதம் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படத் தொடங்கிய போது, மத்திய மின் துறை அமைச்சகம் சார்பில் கோல் இந்தியா நிறுவனத்திற்குச் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில், கையிருப்பு குறைவாக இருக்கும் அனல் மின் நிலையங்களுக்கு முன்னுரிமை அளித்து நிலக்கரியை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், மின் உற்பத்தியைத் தவிரப் பிற தேவைகளுக்கு நிலக்கரி வழங்குவதை நிறுத்தி வைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
எப்போது சரியாகும்
இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாகவே இத்தனை நாட்கள் பெரிய அளவில் மின்வெட்டு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும், நிலை எப்போது சரியாகும் என யாராலும் உறுதியாகக் கூற முடியவில்லை. ஏற்கனவே நிலக்கரி இல்லாத அனல் மின் நிலையங்களின் எண்ணிக்கை தற்போது 18 ஆக உயர்ந்துள்ளது. இதே நிலைமை தொடர்ந்தால் அது பெரிய ஆபத்தையே ஏற்படுத்தும் என வல்லுநர்கள் எச்சரிக்கை மணியை ஏற்கனவே அடிக்க தொடங்கிவிட்டனர்.