சுங்கச்சாவடிகளுக்கு முற்றுப்புள்ளி.. ஜிபிஎஸ் முறைக்கு மாறப்போகும் மத்திய அரசு.. அதிரடி திட்டம்
டெல்லி: ஜிபிஎஸ் முறையில் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சுங்கசாவடிகளை வாகனங்கள் கடந்து சென்ற உடன் வங்கி கணக்கில் இருந்து ஆட்டோமேட்டிக்காக பணம் டெபிட் ஆகுமாம். இரண்டு ஆண்டுகளில் ஜிபிஎஸ் முறையிலான வசூல் முறை இந்தியா முழுவதும் அமலாகும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், புதிய ஜி.பி.எஸ் அடிப்படையிலான வசூல் அமைப்பு முறை அரசாங்கத்தால் இறுதி செய்யப்பட்டுள்ளது, இது நாட்டில் உள்ள டோல் பிளாசாக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய ஜி.பி.எஸ் அடிப்படையில் சுங்க கட்டணம் வசூல் முறையை செயல்படுத்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
பணம் நேரடி டெபிட்
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அசோச்சாம் நிகழ்வில் இதுபற்றி கூறுகையில், இந்த புதிய ஜிபிஎஸ் முறை நாட்டில் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நின்று நின்று நேரத்தை வீணடிப்பபது தடுக்கப்படும். தடையில்லாமல் வாகனங்கள் இயங்குவதை இந்தமுறை உறுதி செய்யும். புதிய ஜிபிஎஸ் அமைப்பின் படி வாகனங்களின் இயக்கத்தின் அடிப்படையில், ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணம் டெபிட் ஆகும்.
எத்தனை வருடம்
ரஷ்ய அரசின் உதவியுடன் ஜி.பி.எஸ் முறையை அரசாங்கம் இறுதி செய்துள்ளது. இரண்டு ஆண்டுகளில், இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி வசூல் செய்யும் முறை இருக்காது என்றார்.
கட்டணம் வசூல்
இதுபற்றி மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ஜி.பி.எஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறையை அமல்படுத்துவது போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஆட்களை போட்டு பணம் வசூலிக்க செலவழித்த பணத்தை மிச்சப்படுத்தவும் அரசாங்கத்திற்கு உதவும். இதன் காரணமாக அரசாங்கத்தின் சுங்க வருமானமும் கணிசமான அளவு அதிகரிக்கும்.
மத்திய அரசு திட்டம்
இப்போது தயாரிக்கப்படும் அனைத்து வணிக வாகனங்களும் ஜிபிஎஸ் கண்காணிப்பு அமைப்புகளுடன் வந்துள்ளன என்பதையும், பழைய வாகனங்களிலும் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை நிறுவுவதற்கான ஒரு தொழில்நுட்ப திட்டத்தை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
சுங்கவரி வசூல்
புதிய ஜி.பி.எஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறை நடைமுறைக்கு வரும்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) ஐந்து ஆண்டுகளில் சுங்கவரி வசூல் மூலம் வருமானம் ரூ .1.34 லட்சம் கோடியாக உயரும் என்று தெரிவித்தன.
ரூ .34,000 கோடி வருவாய்
" சுங்க கட்டண வசூலுக்கு ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மத்திய சுங்க வருமானம் 1,34,000 கோடியாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த நிதியாண்டில் சுங்கவரி வசூல் ரூ .34,000 கோடியை எட்டும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.
என்ன செய்யும் அரசு
சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஃபாஸ்டாக் அடிப்படையிலான கட்டண வசூலை ஜி.பி.எஸ் அடிப்படையிலான முறை மூலம் மேம்படுத்தக்கூடும். ஃபாஸ்டேக்ஸின் பயன்பாடு கட்டண வசூலை வெளிப்படையானதாக ஆக்கியுள்ளது. ஜிபிஎஸ் சிஸ்டம் நடைமுறைக்கு வந்தால், சுங்கவரி வசூல் வருவாய் அரசுக்கு அதிகரிக்கும்.