ரஷ்யாவிடமிருந்து 39 அதிநவீன போர் விமானங்களை வாங்கும் இந்தியா.. உறுதிப்படுத்திய ஹெச்.ஏ.எல்
டெல்லி: ரஷ்ய நாட்டிடமிருந்து மேலும் 18 சுகோய் ரக போர் விமானங்களை வாங்க, இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது பழைய மிக் -21 மற்றும் மிக் -27 விமானங்களுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், இந்திய விமானப்படை குறைந்த அளவிலான போர் விமானங்களையே கையிருப்பில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிக்கவே, 39 புதிய போர் விமானங்களை விரைவில் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சூகோய் சூ-30 எம்.கே.ஐ போர் விமானங்களை இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் மற்றும் ரஷ்ய நாட்டின் சுகோய் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த வகை போர் விமானங்கள் இந்தியாவிலேயே தயரிக்கப்பட்டு வருகின்றன. பிரான்ஸ் நாட்டின் மிராஜ் போர் விமானங்களுக்கு பதிலாக, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு சுகோய் போர் விமானங்கள் வாங்கப்பட்டன.
பிரம்மோஸ் ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட சுகோய் போர் விமானங்கள். ஒரே நேரத்தில் எதிரிகளின் இருவேறு இலக்குகளை தாக்கியழிக்கும் திறன் பெற்றவை. அதே போல அமெரிக்க விமானப்படையின் எஃப்16 போர் விமானத்திற்கு நிகரானது, பன்முக தாக்குதல் திறன் பெற்ற ரஷ்யாவின் மிக்கோயன் மிக்-29 போர் விமானங்கள்.
சுகோய் மற்றும் மிக் வகை விமானங்களும் இந்திய விமானப்படையில் ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக்-29 ரக போர் விமானங்களையும் இந்திய விமானப்படை வாங்க உள்ளது.
இது குறித்து தகவல் தெரிவித்த ரஷ்ய ராணுவம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு துணை இயக்குநர் டிரோச்சோவ், அதிநவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் போர் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தம், 450 டி-90 ரக பீரங்கிகளை நவீனப்படுத்தும் ஒப்பந்தம் ஆகியவை இந்தியாவிடமிருந்து கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு சுகோய் ரக போர் விமானங்களை தயாரித்து அளிப்பதில் அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்றி வருகிறோம் என கூறியுள்ளார். இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் தலைவர் மாதவன், கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் நடைபெற்ற விமான கண்காட்சியின் போது இது குறித்து பேசி முடிவெடுக்கப்பட்டது என்றார்.
எனினும் ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்யப்பட உள்ள 39 அதிநவீன போர் விமானங்களின் ஒப்பந்த மதிப்பு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சூ-30 எம்.கே.ஐ போர் விமானங்களை வடிவமைப்பதற்கு தேவையான அனைத்து முக்கிய கூறுகளையும், ஆயுதங்களையும் ரஷ்யா இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. இதில் AL-31FP இயந்திரம், வைம்பெல் என்பிஓ ஆர்-77, நடுத்தர தூர ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்களும் அடங்கும்.