ரபேலை வைத்து சீனாவை அதிர வைக்கலாம்.. மாஜி விமானப்படை அதிகாரி தரும் குட் நியூஸ்
டெல்லி: திபெத் பிராந்தியத்தில், இந்தியாவை வான் வழியாக சீனா தாக்க முனைந்தால் நமக்கு ரபேல் போர் விமானங்கள் மிகப் பெரிய அளவில் உதவியாக இருக்கும்.. காரணம், திபெத் பிராந்தியத்தில் நமது விமானப்படையின் கையே ஓங்கியிருக்கும் என்று முன்னாள் விமானப்படை தலைமைத் தளபதி தானோ தெரிவித்துள்ளார்.
Recommended Video
ரபேல் போர் விமானங்கள் சரியான நேரத்தில்தான் இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளன. சீனாவின் மிரட்டல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சில முக்கியப் பகுகிதிகளில் நமக்கு ரபேல்தான் மிகப் பெரிய துணையாக இருக்கும் என்று முன்னாள் விமானப்படை தலைமைத் தளபதி பி.எஸ். தானோ கூறியுள்ளார்.
ரபேல் போர் விமானங்களைக் கொண்டு திபெத் பிராந்தியத்தில் இந்தியாவுக்கு சாதகமான அனுகூலங்கள் நிறையவே இருப்பதாக தானோ கூறுகிறார்.
லடாக் பேச்சுவார்த்தை.. பாங்காங் திசோ பற்றி பேச முடியாது.. மறுக்கும் சீனா.. எல்லையில் தொடரும் சிக்கல்
திபெத்தில் சாதக நிலை
சீன விமானப்படையை இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் ரபேல் விமானங்கள் எளிதாக எதிர்கொள்ள முடியும், எதிரியின் வியூகத்ததை எளிதாக தகர்க்க முடியும், மேலும் எதிரி நாட்டின் ஏவுகணைத் தாக்குதலையும் எளிதாக தகர்க்க முடியும் என்பது தானோவின் வாதமாகும். பாகிஸ்தானுக்கு எதிரான பாலகோட் அதிரடித் தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவர் தானோ.
பலே ரபேல்
அவர் ரபேல் குறித்துக் கூறுகையில், இந்தியாவின் ரபேல் போர் விமானம், சீனாவுக்கு எதிரான தாக்குதலில் முக்கியப் பங்கு வகிக்கும். எஸ் 400 ஏவுகணைகள் மூலம் நாம் தாக்குதல் தொடுக்கும்போது அவை நமக்கு கூடுதல் பலம் சேர்க்கும். திபெத் பிராந்தியம் முழுவதும் இந்தியாவுக்கு அனுகூலமான சூழலே காணப்படுகிறது. எனவே இப்பிராந்தியம் வழியாக இந்தியா மீது போர் தொடுக்க ஒன்றுக்கு 2 முறை எதிரிகள் யோசிக்க நேரிடும்.
பாகிஸ்தான் யோசித்திருக்கும்
பாலகோட் சம்பவத்தின்போது நம்மிடம் ரபேல் போர் விமானங்கள் இல்லை. ஒரு வேளை இருந்திருந்தால் பாகிஸ்தான் நம்மைத் தாக்கும் முடிவையே கைவிட்டிருக்கும். ஏன் நினைத்துக் கூட பார்த்திருக்காது. மேலும் அந்த சமயத்தில் நாம் பாகிஸ்தான் எல்லைக்குள் வைத்தே பாகிஸ்தான் விமானத்தை எஸ் 400 ஏவுகணை மூலம் தாக்கினோம். இதை மறக்கக் கூடாது.
மலை பாதுகாப்பு
திபெத் பிராந்தியம் மலைப் பகுதிகள் நிரம்பியது. இத்தகைய சூழ்நிலையில் ரபேல் போர் விமானங்கள் மிகச் சிறப்பாக செயல்படக் கூடியவை. அதன் தொழில்நுட்பம் நமக்கு சாதகமாக இருக்கும். எனவே இந்தியாவின் பதிலடி திபெத் பிராந்தியத்தில் ரபேல் மூலமாக இருந்தால் நிச்சயம் சீனாவை அது அதிர வைக்கும். சீனாவின் தாக்குதல் வியூகங்களும் தவிடுபொடியாகும் என்றார் அவர்.
5 ரபேல் போர் விமானங்கள்
பிரான்சிடமிருந்து 36 ரபேல் விமானங்களை வாங்குகிறது இந்தியா. அதில் தற்போது 5 போர் விமானங்கள் கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன. சீனாவுடன் நிலவி வரும் எல்லைப் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் நமக்காக முன்கூட்டியே ரபேல் விமானங்களை பிரான்ஸ் அனுப்பி வைத்து சீனாவையும் அதிர வைத்துள்ளது. ரபேலின் வருகையால் இந்திய விமானப்படையினரும் கூடுதல் குஷியாகியுள்ளனர். நம்பிக்கையும் கூடியுள்ளது.
ஏவுகணைகளுக்கு பலன் இருக்காது
இன்னொரு விஷயத்தையும் தானோ சொல்கிறார். இந்தியா - சீனா இடையே உள்ள இமயமலைப் பகுதிகள் சீனாவுக்கு பாதகமானவை என்பது அவர் சொல்லும் முக்கிய தகவல். இந்தியாவுக்கு சாதகமாக அது அமைந்திருப்பதாகவும் அவர் சொல்கிறார். திபெத்திலிருந்து சீனா ஏவுகணைகள் மூலம் தாக்க நினைத்தாலும் கூட அதற்கு உரிய பலன் கிடைப்பது சிரமமே என்பது தானோவின் கருத்தாகும். காரணம் அடர்த்தியான பனிப் படலம் காரணமாக இந்தியாவின் நிலைகளை சரியாக குறி பார்த்து சீனாவின் ஏவுகணைகளால் தாக்க முடியாது என்று சொல்கிறார் தானோ.
கேடி சீனா - கில்லாடி ரபேல்
ஆனால் ரபேல் விமானம் இந்த விஷயத்தில் கில்லாடியாகும். இத்தகைய பனிப் படல சூழல்களிலும் கூட சரியாக துல்லியமாக எதிரி நிலைகளை குறி பார்த்துத் தாக்கக் கூடிய வல்லமை ரபேலிடம் உள்ளதாக தானோ சொல்கிறார். ஆக மொத்தம் சீனா தாக்க நினைத்தால் ரபேலை வைத்து இந்தியாவால் தீபாவளி கொண்டாட முடியும் என்பது தானோவின் மறைமுகக் கருத்தாக உள்ளது.