இந்தியா - சீனா 10வது சுற்றுப் பேச்சுவார்த்தை... நிரந்தரமாக முடிவுக்கட்ட திட்டம்
டெல்லி: இந்தியா - சீனா நாடுகள் இடையே நாளை(பிப்.20) ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
கிழக்கு லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு (LOC) பகுதியில் தொடர்ந்து சீனா அத்துமீறி வந்ததால், இந்தியா பதிலடி கொடுக்க நேரிட்டது. இரு தரப்பும் படைகளையும், தளவாடங்களையும் குவித்ததால் அங்கு போர்ப்பதற்றம் நிலவியது. இதனால், அங்கு அமைதியை ஏற்படுத்த இரு தரப்பிலும் ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
அதன் பயனாக கிழக்கு லடாக்கில் பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தென்கரைகளில் இருந்து இரு தரப்பு படைகளையும் திரும்பப் பெறுவது என சமீத்தில் இந்திய, சீன ராணுவம் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அங்கு படைகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கையை இரு தரப்பும் தொடங்கின. சீன துருப்புகள் அங்கிருந்து வெளியேறுவதையும், அவர்கள் தாங்கள் அமைத்திருந்த பதுங்குகுழிகளை அழிப்பதையும் காட்டும் வீடியோவை இந்திய ராணுவம் சமீபத்தில் வெளியிட்டது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே நாளை(பிப்.20) 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதிகாரிகள் மட்டத்திலான இந்த பேச்சுவார்த்தையில், பல்வேறு முக்கிய உடன்படிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கிழக்கு லடாக்கில் துருப்புகளை குவிக்கும் நடவடிக்கையை நிரந்தரமாக நிறுத்த வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.