சீனாவின் ஊடுருவல்களுக்கு எல்லையில் சரியான பதிலடி தரப்படுகிறது- ராஜ்யசபாவில் ராஜ்நாத்சிங்
டெல்லி: எல்லையில் ஊடுருவ முயற்சிக்கும் சீனாவின் நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி தரப்படுவதாக ராஜ்யசபாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஏற்பாடுகளுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.
சீனா அத்துமீறலை விலாவாரியா விவரிச்சாரே ராஜ்நாத்சிங்.. ஆனா 6 மாதமாக ஊடுருவலே இல்லை என்கிறது உள்துறை!
ராஜ்நாத்சிங் அறிக்கை
லோக்சபாவில் செவ்வாய்க்கிழமையன்று சீனாவின் ஊடுருவல் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில் எல்லையில் சீனா ஏப்ரல் மாதம் முதல் எப்படி எல்லாம் படைகுவிப்பில் ஈடுபட்டது என்பதை விவரித்திருந்தார்.
சீனாவுடனான மோதல்
மேலும் கால்வன் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தது தொடர்பாகவும் சீனாவுக்கு கடும் பதிலடி தரப்பட்டதையும் அதில் சுட்டிக்காட்டினார் ராஜ்நாத்சிங். அத்துடன் சீனாவுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின் விவரங்களையும் பகிரங்கப்படுத்தினார் ராஜ்நாத்சிங்.
நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரிக்கை
இருப்பினும் எல்லை ஊடுருவல் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. இந்த நிலையில் ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில், 6 மாதங்களாக எல்லையில் எந்த ஊடுருவலுமே இல்லை என கூறப்பட்டிருந்தது.
உள்துறையின் பதில்
லோக்சபாவில் ராஜ்நாத்சிங் தாக்கல் செய்த அறிக்கையில், 38 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பை சீனா ஆக்கிரமித்திருக்கிறது என்றார்... சீனாவின் ஊடுருவல்கள் எப்படியெல்லாம் நிகழ்ந்தது என்பதையும் விவரித்திருந்தார். ஆனால் உள்துறை அமைச்சகம் இதற்கு மாறான தகவலை ராஜ்யசபாவில் தெரிவித்தது சர்ச்சையானது.
ராஜ்யசபாவில் இன்று அறிக்கை
இதனிடையே இன்று ராஜ்யசபாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், எல்லையில் ஊடுருவ முயற்சிக்கும் சீனாவின் நடவடிக்கைகளுக்கு இந்தியா தக்க பதிலடி தந்து வருகிறது; சீனாதான் அத்தனை ஒப்பந்தங்களையும் தன்னிச்சையாக மீறி வருகிறது. அருணாசலப் பிரதேசத்தின் 90,000 ச.கி.மீ நிலத்துக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது என விவரித்தார்.