இந்தியா கொடுத்த அதிரடி பதிலடி.. சீன ராணுவத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. சீன ஊடகம் தகவல்
டெல்லி: இந்திய ராணுவம் நடத்திய (பதிலடி) தாக்குதலில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஆளும் கம்யூனிஸ்ட் அரசின் செய்தி ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.
லடாக் எல்லைப் பகுதிகள் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீன ராணுவம் இடையே நேற்று இரவு கடும் மோதல் ஏற்பட்டது. இதில் சீன ராணுவம் கல் மற்றும் கட்டையால் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த எதிர்பாராத தாக்குதலால் இந்திய ராணுவ அதிகாரி உட்பட 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற நிலையில் இந்தியா தக்க பதிலடி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன ராணுவ தாக்குதலில்.. வீர மரணம் எய்திய இந்திய வீரர் பழனி.. ராமநாதபுரத்துக்காரர்!
பதிலடி
சீனாவின், குளோபல் டைம்ஸ் இத்தகவலை தெரிவித்துள்ளது. இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி தாக்குதலில், சீனாவைச் சேர்ந்த மக்கள் விடுதலை ராணுவத்தை சேர்ந்த 5 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பிக்க திட்டம்
ஆனால், இந்தியாதான் முதலில் தாக்குதலை தொடங்கியதாக சீன பத்திரிக்கை தெரிவிக்கிறது. வழக்கமாக இந்திய ராணுவம் எந்த நாட்டுக்கு எதிராகவும் அத்துமீறி தாக்குதல் நடத்துவது இல்லை என்பதால் சீனா தன் மீது பழி ஏற்படுவதில் இருந்து தப்பித்துக்கொள்ள இதுபோன்ற ஒரு நாடகத்தை நடத்துவதாக சர்வதேச பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
பேச்சுவார்த்தை
இதனிடையே லடாக் எல்லையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. அடுத்த கட்டமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
மோடியுடன் ஆலோசனை
பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்வதை இரு நாடுகளும் விரும்புவதாக தெரிகிறது. எனவே பிரதமர் மோடியுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்திவிட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க உள்ளார். மோடியுடன், வீடியோமூலமாக ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.