களமிறங்கிய லெப்டினன்ட் ஜெனரல்.. இதற்கு முன் இப்படி நடந்தது இல்லை.. லடாக் மீட்டிங்கின் அதிரடி பின்னணி
டெல்லி: இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த இரண்டு லெப்டினன்ட் ஜெனரல் ரேங்க் கொண்ட அதிகாரிகள் லடாக்கில் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது அத்தனை சாதாரண காரியம் கிடையாது. இதற்கு பின் நிறைய காரணம் உள்ளது .
Recommended Video
இந்தியா சீனா எல்லை பிரச்சனையில் இன்று மிக முக்கியமான நாளாகும். கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் எல்லை பிரச்சனையின் போக்கை நிர்ணயிக்க போவது இன்றைய பேச்சுவார்த்தைதான். இன்று இரண்டு நாட்டு லெப்டினன்ட் ஜெனரல்கள் என்ன பேச போகிறார்கள் என்பதை பொறுத்தே இனி வரும் நாட்கள் தீர்மானிக்கப்படும்.
இந்தியா சார்பாக லெப்டினன் ஜெனரல் ஹரீந்தர் சிங் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இருக்கிறார். லடாக்கில் சுசுல் மோல்டோ பகுதியில் பாங்காங் திசோ அருகே இந்த மீட்டிங் நடக்க உள்ளது.
ஒரு இன்ச் நிலத்தை கூட விட்டுத் தர முடியாது.. பேச்சுவார்த்தைக்கு முன்னர் கொக்கரிக்கும் சீன ஊடகம்
ஏன் முக்கியம்
லடாக் எல்லை பிரச்சனையில் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த இரண்டு லெப்டினன்ட் ஜெனரல் ரேங்க் கொண்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது அத்தனை சாதாரண காரியம் கிடையாது என்று கூறுகிறார்கள். இந்தியா - சீனா எல்லையில் நடக்கும் விஷயங்களை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு ஏன் இது முக்கியம் என்று தெரியும். பொதுவாக இந்தியா - சீனா இடையில் நடக்கும் சண்டை பாகிஸ்தான்- இந்தியா இடையே நடக்கும் சண்டை போன்றது கிடையாது. இது கொஞ்சம் வித்தியாசமானது.
சண்டை வரலாறு
சிக்கிம் எல்லை அல்லது லடாக் எல்லை என்று எதுவாக இருந்தாலும் அங்கு பொதுவாக பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே சண்டையை தீர்த்துக் கொள்வார்கள். 1970க்கு பின் எல்லையில் துப்பாக்கி சண்டை எல்லாம் அதிகாரபூர்வமாக நடக்கவே இல்லை . அதிகபட்சம் கல்லை வீசி தாக்குவார்கள் அல்லது குச்சிகளை வைத்து அடித்துக் கொள்வார்கள். இப்போதும் கூட சண்டை அப்படித்தான் நடந்து வருகிறது.
சமாதானம்
ஒரு குறிப்பிட்ட பகுதியில் எப்போது சண்டை நடந்தாலும், அங்கு இருக்கும் லோக்கல் ராணுவ அதிகாரிகளே ஆலோசனை செய்தும், பேச்சுவார்த்தை செய்தும் சண்டையை முடித்துக் கொள்வார்கள். அதிகபட்சம் இந்த சண்டை குறித்த தகவல் லெப்டினன்ட் அதிகாரிக்கு செல்லும். அவர் பிரச்னையை வந்து தீர்த்து வைப்பார். இந்தியா - சீனா இடையே இத்தனை நாட்கள் எல்லையில் இப்படித்தான் நிலைமை இருந்து வந்துள்ளது.
ஆனால் இந்த முறை
ஆனால் தற்போது லடாக்கில் நடக்கும் பிரச்சனை என்பது அப்படி இல்லை. முதலில் லடாக்கில் எல்லையில் சீனா எதர்ச்சையாக அத்து மீறவில்லை. அடுத்ததாக லடாக் எல்லையில் சீனா திட்டமிட்டு பணிகளையே செய்து வருகிறது. பாங்காங் திசோ பகுதியில் படைகளை குவிப்பது தொடங்கி விமான படைத்தளத்தை விரிவாக்குவது வரை சீனா அனைத்தையும் திட்டமிட்டு செய்து வருகிறது. இந்தியாவை சீண்ட வேண்டும் என்று திட்டமிட்டு செய்து வருகிறது.
எல்லாமே திட்டம்
தூங்குபவனை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவனை எழுப்ப முடியாது என்பார்கள். அப்படித்தான் சீனாவும். சீனா வேண்டும் என்று அத்துமீறி வருவதால் அவர்களிடம் கடந்த ஒரு மாதமாக பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை. இந்தியா நடத்திய பேச்சுவார்த்தை எதுவும் வெற்றிபெறவும் இல்லை. லடாக் எல்லையில் லெப்டினன்ட் லெவல் அதிகாரிகள் ஏற்கனவே 10 முறை பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியை சந்தித்துவிட்டனர்.
மிக மோசம்
லோக்கல் லெப்டினன்ட் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த காரணத்தால் மேஜர் ஜெனரல் மற்றும் மேஜர் லெவல் அதிகாரிகள், கேப்டன்களின் பேச்சுவார்த்தை நடந்தது. அதுவும் தோல்வியில் முடிந்தது. அதன்பின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் சிலர் இடையே பேச்சுவார்த்தை நடந்தும் ஒப்பந்தம் ஏற்படவில்லை. சீனா தொடர்ந்து எல்லையில் படைகளை குவித்து வந்தது .
சீனா சொன்னது என்ன
சீனா என்ன பேச்சுவார்த்தை நடத்தினாலும் கண்டிப்பாக பாங்காங் திசோ பகுதியில் இருந்து ஆக்கிரமிப்புகளை நீக்க மாட்டோம்மென்று உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில்தான் தற்போது இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த இரண்டு லெப்டினன்ட் ஜெனரல் ரேங்க் கொண்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அதனால்தான் இந்த ஆலோசனையிலாவது முடிவு வருமா என்று கேள்வி எழுந்துள்ளது.
வர வாய்ப்பில்லை
இதனால்தான் இந்த ஆலோசனை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதே சமயம் இரண்டு லெப்டினன்ட் ஜெனரல் ரேங்க் கொண்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினாலும் இந்த பிரச்சனை முடிவிற்கு வராது என்கிறார்கள். இன்னும் பல நாட்களுக்கு பிரச்சனை நீடிக்கும். இப்போது தீர்வுக்கான முதல் படி மட்டுமே எடுத்து வைக்கப்பட்டது. பெரிய முடிவுகளை இப்போது எதிர்பார்க்க முடியாது என்கிறார்கள்.